டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.. மத்திய அமைச்சர் அடுத்த அதிரடி

டெல்லி: டிரைவிங் லைசென்சுடன் விரைவில் ஆதார் எண்ணை இணைக்க
திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பான் எண்ணுடன், ஆதாரை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டு அதன் இதற்கான காலக்கெடு டிசம்பர் வரை நீடித்துள்ளது.
இப்போது புதிதாக ஒரு திட்டத்தோடு களமிறங்கியுள்ளது, மத்திய அரசு. டிஜிட்டல் ஹரியானா மாநாட்டில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று பேசுகையில், டிரைவிங் லைசென்சுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என கூறினார். இது குறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன், ஒருவரின் டிஜிட்டல் அடையாளத்தையும், அங்க அடையாளத்தையும் ஒப்பிட முடியும் என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இப்படி ஒருபக்கம் டிஜிட்டல்மயமாகிக்கொண்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருப்பது கட்டாயம் என அரசு நிர்பந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.