பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: ஐகோர்ட் கேள்வி

சென்னை: 'அரசு ஊழியர்களுக்கான, புதிய ஓய்வூதிய திட்டத்தில், அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டதா; இல்லையென்றால், எப்போது
செலுத்தப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
 பங்களிப்பு ,ஓய்வூதிய, திட்டம், ஐகோர்ட், கேள்வி
கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை, உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டித்தார். ஆசிரியர்களின் சம்பள விகிதம், அரசு தரப்பில் எடுக்கப்படும்

நடவடிக்கைகள் பற்றியும், நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் பிளீடர் சஞ்சய்காந்தி, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் பற்றி பதிலளித்தார். ௩௦ ஆண்டுகள் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு, ௯௧ ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் வழங்கப்படுவதாக, அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி கிருபாகரன், ''புதிய ஓய்வூதிய திட்டத்தில், அரசின் பங்களிப்பு தொகையை செலுத்த வேண்டும் என்பது நியாயமானது; ஆனால், போராடும் விதம் தான் சரியல்ல; பங்களிப்பு தொகையை வழங்காத, அரசின் நடவடிக்கையும் தவறு தான்,'' என்றார்.
பின், நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
அரசு பணியில், ௨௦௦௩ம் ஆண்டுக்கு பின் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின்படி, அரசு ஊழியரும்,அரசும், சம அளவு தொகையை செலுத்த வேண்டும். அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டாலும்,
அதற்கு சமமான தொகையை, அரசு தரப்பில் செலுத்தவில்லை என, கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றும், பலருக்கு, 'பென்ஷன்' தொகை வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்க பட்டுள்ளது.'இந்த பிரச்னை குறித்து, நிதித்துறை தான் சரியான பதிலளிக்க முடியும்' என, கூடுதல் பிளீடர் சஞ்சய்காந்தி தெரிவித்தார். எனவே, நிதித்துறை முதன்மை செயலரை, வழக்கில் சேர்க்கிறேன். அவர்சார்பில், கூடுதல் பிளீடர், 'நோட்டீஸ்' பெற்றுக் கொள்வார்.
கீழ்கண்ட கேள்விகளுக்கு, அரசிடம் இருந்து விளக்கம் பெற வேண்டும்.

* பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர் சம்பளத்தில் பிடித்தம் செய்வதற்கு இணையாக, அரசும் செலுத்துகிறதா?

* அரசு தரப்பில் பங்களிப்பு தொகையை செலுத்தவில்லை என்றால், அதை செலுத்துவதற்கு, எவ்வளவு அவகாசம் வேண்டும்?

* ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலருக்கு, பங்களிப்பு பென்ஷன் தொகை வழங்கப்படவில்லை என்பது உண்மையா?

* வழங்கப்படவில்லை என்றால், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எப்போது வழங்கப்படும்?

* அரசு தரப்பில் தவறு இருந்தால், அதற்கான காரணம் என்ன?
ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தாலும், ஏழை மாணவர்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதால், ஆசிரியர்களின் போராட்டத்தை, இந்த நீதிமன்றம் அங்கீகரிக்க வில்லை. அரசு தரப்பில், வரும், ௧௮ம் தேதி, பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
சமூக வலைதள விமர்சனம் நீதிபதி கடும் கண்டனம்
ஆசிரியர்கள் போராட்டம் குறித்து, உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள்குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறாக, ஆபாசமாக விமர்சிக்கப்படுவது பற்றி, செந்தில்குமார், சூரியபிரகாசம், ஞானசேகரன், ஜி.சங்கரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் முறையிட்டனர். நீதிமன்றத்தின் மாண்பு, கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதால், இவ்வாறு செய்திகளை பரப்புவதற்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை
எடுக்க வேண்டும் எனவும் கோரினர்.அதற்கு, நீதிபதி கிருபாகரன், விமர்சனங்கள் குறித்த செய்தி விபரங்களை தாக்கல் செய்தால், அதை ஆராய்ந்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பதாக கூறினார்.
இதுகுறித்து, நீதிபதி கிருபாகரன் மேலும் கூறியதாவது:
எந்த உத்தரவை, நீதிமன்றம் பிறப்பித்தாலும், அதை விமர்சிப்பதற்கு என்றே சிலர் உள்ளனர்; நீதிமன்ற உத்தரவு பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல், 'டிவி' விவாதங்களில் பங்கேற்பவர்கள் விமர்சிக்கின்றனர். சமூகத்தில் அது, எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் பேசுகின்றனர். பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், ஒரு நீதிபதி உத்தரவு பிறப்பிக்கிறார். உடனே, நீதிபதியும், அந்தப் பெண்ணும், ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என, கூறுகின்றனர்.

வாகனங்களை ஓட்டுபவர்கள், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேணடும் என, உத்தரவிட்ட போது, ஏராளமான கடிதங்கள் வந்தன. அவற்றில், 20சதவீதம் ஆதரவு தெரிவித்தும், 80 சதவீதம் எதிர்ப்பு தெரிவித்தும் இருந்தன. கடிதங்களில், அந்த அளவுக்கு வசைகள் இருந்தன. என் அப்பா, அம்மா, ஆசிரியர்கள் கூட, இப்படி திட்டியதில்லை. இரு சக்கர வாகனம் ஓட்ட தெரியுமா; பள்ளமான சாலையில், மனைவியுடன், வாகனத்தில் சென்றது உண்டா எனவும் கேட்கின்றனர். இவ்வாறு நீதிபதி கூறினார்.