ஆசிரியர் பணிக்கு தகுதியான பட்டதாரி இல்லை டி.ஆர்.பி., தேர்வில்865 இடங்கள், 'அவுட்'

அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலியாக விடப்பட்டுள்ளன. இது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பாடம் எடுக்க, முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கபடுகின்றனர். அரசு பள்ளிகளில், இந்த பதவிக்கு காலியாக உள்ள, 3,375 இடங்களை நிரப்ப,
தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஜூலை, 2ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர்; முடிவுகள், ஆக., 11ல் வெளியிட பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆக., 28, 29ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

இதில், மொத்தம், 3,375 இடங்களுக்கு, 2,510 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 865 இடங்களுக்கு, தகுதியான பட்டதாரிகள் கிடைக்கவில்லை. அதனால், அந்த இடங்கள் காலியாக வைக்கப்பட்டு உள்ளன.


பாட வாரியாக தேவைப்படும் பட்டதாரிகளில், வேதியியலில் மொத்தம், 387ல், 278 பணி இடங்களுக்கு,தகுதியான ஆட்கள் கிடைக்க வில்லை. பொருளியல் பாடத்திற்கு,319 இடங்களுக்கு, 58 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். தமிழ் பாட ஆசிரியர்களில், 412 இடங்களுக்கு, 255 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்; 157 இடங்கள் காலியாக உள்ளன.

ஜாதி வாரி இட ஒதுக்கீட்டில், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் தவிர, மற்ற வகுப்பினரில், அதிக இடங்கள் காலியாக உள்ளன.பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 332 இடம்; பொது பிரிவு, 126; மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 241மற்றும் முஸ்லிம்களில், 79 இடங்களுக்கு ஆட்கள் இல்லை.கோடிக்கணக்கான பட்ட தாரிகள் படித்து விட்டு, வேலைக்கு பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், ஆசிரியர் பதவிக்கான எழுத்து தேர்வில், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காதது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.