உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை

மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அரசு சம்பளத்தில், 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

ஊதிய உதவிகள் : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இவர்களுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், ஊதிய உதவிகள் வழங்கப்படுகின்றன.இந்த நிதியை பயன்படுத்தி, ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சம்பளம் வழங்குகிறது. மத்திய அரசு உத்தரவுப்படி, பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், மூன்று ஆசிரியர்கள்; 50 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர். இப்படி, மாணவர் விகிதத்தைவிட, ஆசிரியர் விகிதம் அதிகமாக இருப்பதால், அரசு நிதி விரயமாகிறது. இதை தடுக்க, பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் என்ற விதியின் கீழ், இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

உத்தரவு : இது குறித்து, 22ம் தேதி, சென்னையில், மாவட்ட தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாணவர் சேர்க்கை விபரம், மூடப்பட்ட, செயல்படாத பள்ளிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, மின் வசதியில்லாத பள்ளிகள், ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை, 'ஸ்மார்ட்' பள்ளிதேர்வு பட்டியல் என, ௩௬ வகை அம்சங்களுடன் கூட்டத்தில்பங்கேற்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.