பிளஸ் 2 துணைத் தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை செப்.18 முதல் பதிவிறக்கம் செய்யலாம்!!

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை  இணையதளத்தில் திங்கள்கிழமை (செப்.18) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
தமிழகத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தத்கல் உள்பட) செப்.18 (திங்கள்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும்.
அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வருகை தர வேண்டும்.
மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ் ) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித் தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.