ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம்
அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள்
கொண்ட அமர்வு இன்று (ஆகஸ்ட்,24) தீர்ப்பு வழங்கியுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. அதன் படி இதுவரை பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ரேஷன் பொருட்களைப் பெறவும், பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கும், இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறவும், வாகனங்களைப் பதிவு செய்யவும், பள்ளி மாணவர்கள் சத்துணவை பெறவும், ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகளைப் பெறவும், கல்வி உதவித்தொகை பெறவும், பொதுத் தேர்வுகளை எழுதவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆதார் விவரங்கள் கசிந்து நாடு முழுவதும் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, ஆதார் அட்டைக்காகக் கைரேகை, கருவிழியைப் பதிவு செய்வதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆதார் திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக தனிநபர் சுதந்திரம் குறித்து எம்.பி.சர்மா மற்றும் கரக்சிங் வழக்குகளில் 8 நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனவே, இதுகுறித்து கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து முடிவெடுப்பதற்காகத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், ஜெ.சலமேஸ்வர், எஸ்..பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அப்துல் நசீர், ஆர்.கே.அகர்வால்,n ஆர்.எஃப்.நாரிமன், .எம்.சாப்ரே, எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது.இந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் ,24) காலைத் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனிநபர் சுதந்திரம் என்பது அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் படி அடிப்படை உரிமையே என 9 நீதிபதிகளும் ஒருமித்த கருத்து தெரிவித்து இன்றுதீர்ப்பளித்தனர். மேலும், தனிமனித தகவல்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதிப்பாட்டை மத்திய அரசு வழங்கவேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.