தொழில்நுட்ப தேர்வில் விதிமீறலா? : அரசு தேர்வு துறை விளக்கம்

'தொழில்நுட்ப தேர்வில், எந்த விதிமீறலும் நடக்கவில்லை' என, அரசு தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பு பாட ஆசிரியர்களாக பணியாற்ற, அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 


பிற மாநிலத்தவர் : ஆந்திரா மற்றும் கேரளாவில், இந்த தேர்வு நடத்தப்படுவது கிடையாது. அதனால், தமிழக அரசு நடத்தும் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிற மாநிலத்தவரும், அதிகளவில் பங்கேற்பர். இந்த ஆண்டு, ஜூலையில், தொழில்நுட்ப தேர்வு நடத்தப்பட்டது. இதில், தமிழக அரசாணையில் கூறப்பட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என, புகார் எழுந்தது. இது குறித்து, கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார், முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் அளித்தார்.

அதற்கு பதிலளித்து, அரசு தேர்வுத் துறை துணை இயக்குனர் சுரேஷ்ராஜா கூறியுள்ளதாவது:
ஜூலையில் நடந்த தொழில்நுட்ப தேர்வுக்கு, ௨௦௧௬ டிசம்பரில் தயாரிக்கப்பட்ட வினாத்தாள் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும், அந்த வினாத்தாள், எந்த விதத்திலும் வெளியே கசியாமல், பாதுகாப்பாக வைக்கப்பட்டது. கோவை, ஒண்டிப்புதுார், அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், தேர்வர்களுக்கு போதுமான இருக்கைகள் வழங்கப்பட்டன. 

தரையில் அமர்ந்து : ஆனால், தேர்வர்களே விருப்பப்பட்டு, தரையில் அமர்ந்து தேர்வை எழுதினர். 
திருச்சி மையத்திலும், எந்த விதிமீறலும் நடக்கவில்லை. இந்த தேர்வை, தேர்வுத் துறை கண்காணிப்பு குழுவினர், மாநிலம் முழுவதும் கண்காணித்தனர்; விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.