ஒரே பெயரில் பல என்ஜினீயரிங் கல்லூரிகள்: மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் வேண்டுகோள்

ஒரே பெயரில் பல என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளதால், 
மாணவ–மாணவிகள் குழப்பம் அடையாமல் கல்லூரியின் 
கலந்தாய்வு கோடு எண்ணுடன் கல்லூரியை தேர்ந்து எடுங்கள் 
என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் 
எஸ்.கணேசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு 
ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ–மாணவிகளை சேர்ப்பதற்காக 
அண்ணா பல்கலைக்கழகம் வருடந்தோறும் கலந்தாய்வு 
நடத்தி வருகிறது. இந்த வருடம் தொழிற்கல்வி 
மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 17–ந் தேதி 
தொடங்கியது. பொது கலந்தாய்வு கடந்த 23–ந் தேதி 
தொடங்கி நடந்து வருகிறது. வழக்கத்தை விட கலந்தாய்வு 
தாமதமாக தொடங்கியதால் தினமும் அதிக மாணவர்கள் 
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

நேற்றைய நிலவரப்படி 40 ஆயிரம் பேர் என்ஜினீயரிங்கில் சேர்ந்துள்ளனர். வழக்கத்தை விட இந்த வருடம் விண்ணப்பித்தவர்களில் அதிக சதவீதம் பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவு முதல் இடத்தில் இருக்கிறது. இது வரை அந்த பிரிவை 8 ஆயிரத்து 539 பேர் தேர்வு செய்துள்ளனர். மெக்கானிக்கல் பிரிவு 2–வது இடத்தில் உள்ளது. 7,021 பேர் இந்த பிரிவை தேர்வு செய்தனர்.

நேற்று வரை கலந்தாய்வில் 30 சதவீத கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.

கலந்தாய்வில் கல்லூரிகளின் பெயர்கள் ஒன்று போல இருப்பதால் மாணவர்கள் கலந்தாய்வு கோடு எண் இருப்பது தெரியாமல் குழப்பம் அடைந்து அவர்கள் விரும்பும் கல்லூரி அல்லாமல் வேறு கல்லூரியை தேர்ந்து எடுத்து விடுகிறார்கள்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன் கூறியதாவது:–

கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்கள், ஒரு நாள் முன்பே அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து தனது ‘கட் ஆப்’ மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரியை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என்றும், அந்த கல்லூரியின் கலந்தாய்வு கோடு எண்ணையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள திரையில் கல்லூரியின் கோடு எண் வெளியிடப்படுகிறது. இதனை மாணவர்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு மாணவர் அதிக ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்றிருப்பார். ஆனால் கலந்தாய்வு கோடு எண் தெரியாமல் குறைந்த மதிப்பெண்ணுக்கு கிடைக்கக்கூடிய கல்லூரி அவருக்கு கிடைத்து விடும். பின்னர் இதுபற்றி புலம்புவதில் அர்த்தம் இல்லை.

எனவே மாணவ–மாணவிகள் கலந்தாய்வு அறைக்கு செல்லும்போது கவனமாக கல்லூரிகளின் கலந்தாய்வு கோடு எண்களை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு முறை தேர்ந்து எடுத்தால் அதுதான் இறுதி.

இவ்வாறு பேராசிரியர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.