ஆக., 22ல், 'ஜாக்டோ - ஜியோ ஸ்டிரைக்' : ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை - DINAMALAR

சென்னை : 'ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு நடத்தும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை, அரசு எச்சரித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' என்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, வரும், 22ல், ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்க திட்டமிட்டு உள்ளனர்.


அதற்காக, மாநில, மாவட்ட அலுவலகங்களில், அரசு ஊழியர்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும், 22ல், வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதாக, துறை அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.இந்நிலையில், 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், அவர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக தலைமை செயலர், கிரிஜா வைத்திய நாதன் எச்சரித்துள்ளார். அவரது சுற்றறிக்கை, அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் ஒட்டப்பட்டு உள்ளது. 

அதில் கூறியிருப்பதாவது:வேலை நிறுத்தம் செய்வது சட்ட விரோதம். அரசு பணியில் இருப்போர் பணிக்கு வராவிட்டால், அந்த நாளில், அரசு பணிகள் முடங்கும். எனவே, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 


தொகுப்பூதியம் பெறும் தற்காலிக ஊழியர்கள், பணியில் இருந்து நீக்கப்படுவர்.
வரும், 22ல், தற்செயல் விடுப்பு, அவசர விடுப்பு எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சரியான காரணங்களை கூறினால், மருத்துவ விடுப்பு மட்டும் அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.