தமிழகத்தில் 10 பல்கலைகளுக்கு தொலைநிலை கல்வி அனுமதி, 'கட்'

தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை மற்றும் மதுரை காமராஜர் உட்பட, 10 பல்கலைகளுக்கு, தொலைநிலை கல்விக்கான அனுமதி கிடைக்கவில்லை. அதனால், பல்கலை நிர்வாகத்தினர் குழப்பமடைந்து உள்ளனர்.




15 லட்சம் பேர்


தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில், 13 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றின் உறுப்புக் கல்லுாரிகளில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும், பல்கலைகளில் நேரடியாகவும், தொலைநிலை கல்வியிலும்,பல்வேறு படிப்புகளும் நடத்தப்படுகின்றன.மாநிலம் முழுவதும், தொலைநிலை கல்வியில் மட்டும், ஆண்டுக்கு, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்; 15 லட்சம் பேர் வரை, பல்வேறு படிப்புகளில் சேருகின்றனர்.

தொலைநிலை கல்வி நடத்துவதற்கு, மத்திய அரசின், பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., சார்பில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவற்றை, பல்கலைகள் பின்பற்றினால் மட்டுமே, தொலைநிலை கல்வி நடத்த, யு.ஜி.சி., அனுமதி வழங்கும்.அனுமதி பெறும் பல்கலைகளும், அரசு பல்கலை என்றால், அந்தந்த மாநிலத்தை தவிர, வேறு மாநிலங்களில் கல்வி மையம் அமைக்கக் கூடாது என, நிபந்தனை உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு, தொலைநிலை கல்வி நடத்த அனுமதிக்கப்பட்ட பல்கலைகளின் பட்டியலை, www.ugc.ac.in என்ற இணையதளத்தில், யு.ஜி.சி., வெளியிட்டுஉள்ளது.

தமிழகத்தில், சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, அண்ணாமலை பல்கலை, மதுரை காமராஜர், பாரதிதாசன், பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார், பெரியார், திருவள்ளுவர் என, அரசின், 10 பல்கலைகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால், பல்கலை நிர்வாகத்தினரும், உயர் கல்வித் துறை அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர்.


அச்சமின்றி படிக்கலாம்

இது குறித்து, உயர் கல்வித் துறையில் விசாரித்த போது, 'இந்த பிரச்னை குறித்து, பல்கலைகளின் சார்பில், நீதிமன்றத்தில் பல்வேறு உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. அதனால், மாணவர்கள் அச்சமின்றி தொலைநிலை கல்வியில் படிக்கலாம்' என்றனர்.