மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி நீட்டிப்பு மருத்துவ கவுன்சிலின் வேண்டுகோளை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்தது. பின்னர் இந்த தடையை கடந்த மாதம் 12–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் கடந்த 23–ந்தேதி வெளியிடப்பட்டது.

நீட் தேர்வு வெளியிட தடை விதிக்கப்பட்டதன் காரணமாக அதில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தாமதம் ஆனது. இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கூறிய கால அவகாசத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க இயலவில்லை. எனவே, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்டு மாதம் 28–ந்தேதிக்கு உள்ளாகவும், பல் மருத்துவத்துக்கான கலந்தாய்வை செப்டம்பர் மாதம் 10–ந்தேதிக்கு உள்ளாகவும் நடத்தி முடிக்கும் வகையில் அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
இதை சுப்ரீம்கோர்ட்டு ஏற்றுக்கொண்டு இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்த கால அவகாசத்துக்குள் கலந்தாய்வை நீட்டித்து நடத்தி கொள்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.