விடுமுறை நாட்களிலும் வகுப்பு : இன்ஜி., கல்லூரிகளுக்கு உத்தரவு

இன்ஜி., கவுன்சிலிங் தாமதமானதால், விடுமுறை நாட்களிலும் வகுப்புகளை நடத்த, கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு பிரச்னையால், தமிழகத்தில் மட்டும், இன்னும் மருத்துவ கவுன்சிலிங்
நடக்கவில்லை. இதனால், இன்ஜி., கவுன்சிலிங்கும், மூன்று வாரங்கள் தாமதமாக துவங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஆக., 25க்குள் கவுன்சிலிங் நடவடிக்கைகளை முடித்து கொள்ள, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து, செப்., 3க்குள் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு வகுப்புகளை துவங்க உள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விதிகளின் படி, ஆக., முதல் வாரம் வகுப்புகளை துவங்க வேண்டும். மேலும், அண்ணா பல்கலையின் விதிகளின் படி, ஒரு செமஸ்டருக்கு, 75 நாட்கள் வகுப்புக்கும், 15 நாட்கள் தேர்வுக்கும் என, மொத்தம், 90 நாட்கள் கல்லுாரிகள் இயங்க வேண்டும். இந்த ஆண்டு, தாமதமான கவுன்சிலிங்கால், வகுப்பு நடத்துவதில், நாட்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.'இதை சமாளிக்க, வழக்கமாக விடுமுறை அறிவிக்கப்படும், அனைத்து சனிக்கிழமைகளிலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த வேண்டும். பல்கலை செமஸ்டர் தேர்வு அட்டவணையை பின்பற்ற வேண்டும்; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது.