தமிழக கல்வி நிலையங்களில் வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் ஐகோர்ட் உத்தரவு

பட்டதாரி ஆசிரியர் கே.வீரமணி, சென்னை ஐகோர்ட்டில்  மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வந்தே மாதரம்’ எந்த மொழியில் எழுதப்பட்டது என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நான் வங்காள மொழி என்று எழுதினேன். ஆனால், எனது பதில் தவறு என்று கூறி ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது.
பி.எட் படிப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் வங்காள மொழியில்தான் வந்தே மாதரம் எழுதப்பட்டது என உள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீ ஆன்சரில் மட்டும் சமஸ்கிருதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எனது பதிலுக்கு ஒரு மதிப்பெண் தருமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, "வந்தே மாதரம் பாடல், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஆங்கிலேயருக்கு எதிராக முழக்கமிடும் தேசிய பாடலாகப் பாடப்பட்டது. சமஸ்கிருத மொழியில்  தனக்கு உள்ள ஆர்வத்தால் வந்தே மாதரம் பாடலில், பக்கிம் சந்திர சட்டர்ஜி சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். மனுதாரர் சரியான பதிலை எழுதியுள்ளார் என்றாலும், அவர் பெற்ற மதிப்பெண்களுடன் இந்தக் கேள்விக்கான ஒரு மதிப்பெண்ணையும் சேர்த்தால், தேர்ச்சிக்கான சராசரி மதிப்பெண் கணக்கீட்டில் அவருக்கு தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் வரவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீர்ப்பளித்த  நீதிபதி "வந்தே மாதரத்தைப் பள்ளி, கல்லூரிகளில் பாடாததால்தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டது. எனவே, பள்ளி, கல்லூரிகளில் வாரம் ஒருமுறையாவது வந்தே மாதரம் பாடலைக் கட்டாயம் பாட வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழைமைகளில் பாடலாம். அரசு, தனியார் நிறுவனங்களில் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும். வந்தே மாதரம் பாடலை சமஸ்கிருதம், வங்கத்தில் பாட விருப்பமில்லாத பட்சத்தில் தமிழில் மொழிபெயர்த்து பாடலாம். வந்தே மாதரம் பாடலை பாட விருப்பமில்லாதோர் மீது எவ்வித அழுத்தத்தையும் கொடுக்கக் கூடாது" என்று உத்தரவிட்டார்.