தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு உண்டா? நாளை தெரியும்.. திமுக எம்பி திருச்சி சிவா!

நீட் தேர்வு விவகாரத்தில் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கேள்விக் குறியாகியுள்ளது. இதையடுத்து நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஆளும் கட்சி அமைச்சர்கள் மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்தனர். அப்போது நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மத்திய அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நீட் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும் பதவிப் போராட்டத்தால் அதிமுகவினர் கடமையை மறந்து விட்டனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு தேவையில்லை என்பதே திமுகவின் நிலை என்றும் திருச்சி சிவா கூறினார்.

மேலும் வட இந்திய மாணவர்களுக்கு ஏற்றவாறு நீட் தேர்வில் கேள்வி கேட்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். நீட் தேர்வுக்காக மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றிய போது அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு நிலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் நாளை முக்கிய முடிவை அறிவிப்பதாக ஜே.பி.நட்டா கூறினார் என்றும் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறினார்.