பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்

தமிழகத்தில், 21 கல்லுாரிகளுக்கான, பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று 
துவங்குகிறது.

தமிழக அரசின், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் என, 21 கல்வியியல் கல்லுாரிகளில், 1,753 இடங்களில், பி.எட்., படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு, தமிழக அரசு சார்பில், லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரியால், ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.



முதல் நாளான இன்று, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. மற்ற பிரிவினருக்கு, நாளை முதல் கவுன்சிலிங் நடக்கும். விண்ணப்பம் பெற்ற, 6,281 பேரில், 5,833 பேர் விண்ணப்பம் அனுப்பினர். அவர்களில், சரியான, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்ற, 2,996 பேர், முதற்கட்ட கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு,1,000 ரூபாய்; மற்றவர்களுக்கு, 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

இதை, 'செயலர், தமிழ்நாடு, பி.எட்., மாணவர் சேர்க்கை, 2017 - 18' என்ற பெயரில், 'டிடி' என்ற, வங்கி வரைவோலையாக தர வேண்டும்.கவுன்சிலிங், 22ம் தேதி வரை நடக்கிறது. பி.இ., - பி.டெக்., படித்தவர்களுக்கு, வரும், 19ம் தேதி இடங்கள் ஒதுக்கப்படும். அவர்களுக்கு, 10 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை, www.ladywillingdoniase.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.