எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் ஒத்திவைப்பு

''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு மற்றும் கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது,'' என, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறினார்.


தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 50 ஆயிரத்து, 558 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதற்கு, நேற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 17ம் தேதி கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதனால், வரும், 17ல் நடக்க இருந்த சேர்க்கை கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது:நீதிமன்ற உத்தரவால், ஏற்கனவே திட்டமிட்டப்படி, தரவரிசை பட்டியல் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கவுன்சிலிங் நடத்த முடியாது. தமிழக அரசு மேல்முறையீடு செய்து, அதற்கான தீர்ப்பு வரும் வரை, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.