பி.இ., - பி.டெக்., படிப்புக்கு இன்று கவுன்சிலிங் துவக்கம்

சென்னை: அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 583 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.67 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.

இதில் பங்கேற்க, ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 77 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், ஒரு லட்சத்து, 36 ஆயிரத்து, 988 பேர் தகுதி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது. தொழிற்கல்வி பிரிவில், 6,224 இடங்கள், அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன. வரும், 18ம் தேதி, பிற்பகல், 2 மணியுடன் தொழிற்கல்வி கவுன்சிலிங் முடிகிறது. இதில், 2,083 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளதால், 4,500 இடங்கள் வரை காலியாகும். வரும், 23ல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் துவங்குகிறது.

விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கடிதம் : இன்ஜி., படிப்பில் சேர விளையாட்டு பிரிவில் 2,105 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 2,082 பேர் தகுதி பெற்றுள்ளனர்; அவர்களில் 571 பேர் மாணவியர். அவர்களுக்கு 19, 20ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம், இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியின் www.tnea.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கவுன்சிலிங் தேதி விபரம்

தொழிற்கல்வி ஜூலை 17,18
மாற்றுத் திறனாளி பிரிவு ஜூலை 19
விளையாட்டு பிரிவு சான்றிதழ் ஆய்வு ஜூலை 19,20
விளையாட்டு பிரிவு கவுன்சிலிங் ஜூலை 21
பொதுப்பிரிவு ஜூலை 23
பொது கவுன்சிலிங் நிறைவு ஆக., 11
துணை கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு ஆக., 16
காலியிடங்களுக்கான துணை கவுன்சிலிங் ஆக., 17
அருந்ததியர் காலியிடத்துக்கு, ஆதி திராவிடர் கவுன்சிலிங் ஆக., 18