ஆசிரியர்கள் உருவாக்க வேண்டியது மதிப்பெண்கள் சேகரிக்கும் எந்திரங்களை அல்ல!

ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தீர்மானிக்கப்படுகிறது எனும்பொழுது அப்படிப்பட்ட வகுப்பறை எப்படி இருக்கவேண்டும்? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வருங்கால தேசத்தை கட்டமைக்கும் வகுப்பறை
, அறிவால் பலம் பொருந்தியதாகவும், ஆற்றலால் வளம் நிறைந்ததாகவும், நல்ல மனப்பான்மையின் இருப்பிடமாகவும் அல்லவா இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே கலாம் தேடிய மாணவர்களாக, விவேகானந்தர் காண விரும்பிய இளைஞர்களாக ஒவ்வொரு மாணவர்களையும் வெளிக்கொணர
முடியும். மதிபெண்களை துரத்துவதை விட்டுவிட்டு நல்ல மனப்பான்மை கொண்டு முதலில் நாம் வகுப்பறைகளை மாற்றம் பெறச்செய்ய வேண்டும்.
மாற்றம் என்பது வெறும் வண்ணங்களாலும், தொழில்நுட்பங்களாலும் நிகழ்வதாய் மட்டும் அமைதல் கூடாது. அவை புறத்தை அழகாக்கும்... ஆனால் அகம் அழகு பெற/ மாற்றம் பெற வேண்டுமே!
"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு" எனும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க நல்ல எண்ணங்களால் (positive attitudes) வகுப்பறையை நிரப்ப வேண்டும். மாணவர்களிடம் மாற்றம் ஏற்படவேண்டும் என்றால் முதலில் மாற்றங்கள் ஆசிரியர்களிடத்தில் ஏற்படவேண்டும்.
நல்ல ஆசிரியர் எப்பொழுது உருவாகிறார்?
- என்று பார்த்தால் அவர் கற்றலில் ஆர்வம் கொண்டு ஒவ்வொரு நாளும் தன்னை அப்டேட் செய்து கொண்டும், செய்து கொள்ளத் தயாராகவும் இருந்து கற்றலில் ஆர்வம் உள்ள மாணவராய் தன்னைக் கருதும் ஆசிரியரே எப்போதும் நல்ல ஆசிரியராகத் திகழ முடியும்... இன்றைய மாணவரிடத்தில் வகுப்பறையில் தன்னம்பிக்கையோடு நிற்கமுடியும். அவரிடத்தில் சாதி, மத, இன, பொருளாதார என எந்த ரீதியிலான பாகுபாடும் இருத்தல் கூடாது. ஆனால் பெரும்பாலும் அவ்வாறு காண்பது வெகு அரிதாகவே இருக்கிறது. அவர்களது வட்டம் மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாகவேண்டுமே தவிர,
தகுதியின் அடிப்படையிலோ, இன அடிப்படையிலோ அமையக் கூடாது.
ஆசிரியர்கள் உருவாக்க வேண்டியது மதிப்பெண்கள் சேகரிக்கும் எந்திரங்களை அல்ல!
மனிதனது மூளை வளர்ச்சியில் 80% அவர்களுடைய 12 வயது வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சியுற்று விடுகிறது. அத்தகைய காலகட்டத்தில் அவர்களது பெரும்பான்மையான காலம் பள்ளிகளிலேயே அமைகிறது. அதிலும் குறிப்பாக 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான தொடக்கக்கல்வி பருவமாக அது அமைகிறது. அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் என்னதான் கற்பித்தலில் திறன் பெற்றவர்களாக இருந்தாலும், தொழில்நுட்பத்தில் பேரறிவு கொண்டவர்களாக திகழ்ந்தாலும் கூட மாணவர்களது மனப்பான்மையின் மீது அக்கறையும் ஈடுபாடும் இல்லாதபொழுது அது மாணவர்களின் மதிப்பெண்களை உயர்த்துமே தவிர அவர்களது சுய மதிப்பையோ, மதிப்பான எண்ணங்களையோ உயர்த்துவதாக அமையாது. ஆசிரியர்கள் உருவாக்க வேண்டியது மதிப்பெண்கள் சேகரிக்கும் எந்திரங்களை அல்ல... மதிப்பான எண்ணங்களைக் கொண்ட மாணவர்களை! என்பதை மறந்து மதிப்பெண்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூழல் இன்றைய சூழல்.
அதனால்தான் இன்றைய காலகட்டத்தில் ஆசிரிய மாணவ உறவு என்பது மிகுந்த சிக்கல்களுக்கு உள்ளானதாக மாற்றம் பெற்று உள்ளது. சிறந்த சமூகத்தினனாக திகழவேண்டிய மாணவன் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போலவும், கற்பிப்பது மட்டுமே எனது பணியே தவிர... இந்த சமூகத்தை கட்டமைப்பது தன்னுடைய பணி இல்லை! என பெரும்பான்மையான ஆசிரியர்கள் சமூகத்தை விட்டு தள்ளி நிற்கும் மனப்பாங்கும் ஏற்பட்டுவிட்டது. அந்த பருவத்தில் பக்குவபடுத்தப்படாத மாணவ சமுதாயம் வளர வளர, சுயகட்டுப்பாடற்ற ஒழுங்குடன் வளர்ந்து பெரும்பாலும் சமூகத்திற்கானவனாக தன்னை மாற்றாமல், தனக்கான சமூகமாக இது இல்லை என சமூகத்தின் மீது பற்று இல்லாதவனாக மாறிப்போய் விடுகிறான்.
தற்போதைய உடனடித்தேவை மனப்பான்மை மாற்றம்(Attitude change)
"மாற்றங்களை உருவாக்குவோம்" இதை எங்கிருந்து முதலில் தொடங்குவது என்று பார்த்தோமேயானால்; "தலைவன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி" எனச் சொல்வதற்கு ஏற்ப முதற்கட்டமாக 1
முதல் 8 வரையிலான வகுப்பு கொண்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். அதில்;
1) தன்னை அறிதல்( self analysis)
*உனக்கு நீயே விளக்கு* என புத்தர் குறிப்பிடுகிறார். நடக்கப் பாதையில்லையே என்று ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. அடுத்தவர் எப்பொழுது பாதை ஏற்படுத்துவார் எனக் காத்திருக்கவும் கூடாது. ஓர் அடி எடுத்துவைக்க ஆரம்பித்தால் அதுவே பாதைக்கான முதற்படி. எதையும் நம்மிலிருந்தே தொடங்க வேண்டும். தொடக்கம் நம்மிடமிருந்து ஆரம்பித்தால்தான் முடிவும் நம்முடையதாக இருக்கும்.
ஆசிரியர்கள் தாம் யார் என்பதையும், தனக்குள்ள சமூகப் பொறுப்பு என்னவென்பதையும், மாணவர்களின் எதிர்காலம் நம்மிடம்தான் உள்ளது என்பதையும் உணர்ந்திருத்தல் வேண்டும். மேலும் அவர்கள் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் என்கிற கருத்தையும் உணர்தல் அவசியம். தன்னிடம் உள்ள திறமைகள் என்னென்ன? எவை எவற்றை எல்லாம் தான் சரி செய்துகொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுக்க வைப்பதற்கு இது உதவும்...
2) SWOT
தன்பலம் அறியாத யானைதான் சின்ன சங்கிலியின் பிணைப்புக்குள் யானைப்பாகனின் அங்குசத்திற்கு கட்டுப்பட்டு அடிமைபோல பணியாற்றுகிறது.. பணிதல் என்பது வேறு.. அடிமைப்படுதல் என்பது வேறு.. ஒவ்வொருவரும் மிகமுக்கியமாக அறிய வேண்டியது SWOT கோட்பாடு ஆகும்.
  • Strength
  • Weak
  • Opportunity
  • Threat
- என்கிற கோட்பாட்டை பயிற்றுவித்துவிட்டால் தமது பலம், பலவீனம், வாய்ப்புகள், தடைகள் போன்றவற்றை தாமே அறிந்து அதன்மூலம் தனது நிலையை மேம்படுத்திக்கொள்ள முடியும். இது மாணவர்களை அணுகுவதற்கும், சமூகத்தோடு இணைந்து செயலாற்றவும் மிக முக்கியமான ஊக்கியாக இருக்கும்...
3) பேச்சுக்கலை (effective public speaking)
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை"
- என்பதற்கு இணங்க அப்படிப்பட்ட செல்வத்தை வழங்க சொல்லாற்றல் மிகவும் முக்கியமானதாகும்.
பேச்சுக்கலை என்பது உரிய பயிற்சி பெற்றால் எல்லோருக்கும் சாத்தியமே. அதிலும் ஆசிரியர்களாக திகழ்பவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று பேச்சுக்கலை.. எப்படிப்பட்ட இடத்திலும், எந்த சூழலிலும் பேச்சுக்கலையானது பேசுபவரின் தனித்துவத்தை வெளிக்காட்டும். பேச்சுக்கலையில் உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு, பார்க்கும் விதம், மேடைப்பயன்பாடு, பேச்சை தயாரித்தல், பார்வையாளர்கள் மனநிலை, பேசப்படும் இடம் இதுசார்ந்த விசயங்களை கற்றுக்கொள்ள முடியும். இது மிகுந்த தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிப்பதாக இருக்கும். எனவே ஆசிரியர்கள் அனைவருக்கும் பேச்சுக்கலை என்பது அவசியமானதாகும்.
4) தலைமைப்பண்பு (leadership qualities)
"தலைவர்கள் பிறப்பதில்லை உருவாகிறார்கள்" இன்றைய சூழலில் நல்ல வழிகாட்டல் அளிக்கக் கூடிய தலைவர்களே தேசத்திற்கு அதிகம் தேவை. தலைவர்கள் என்றாலே அரசியலில் இருப்பவர்கள் மட்டுமே தலைவர்களாக சித்தரிக்கப்படும் தவறான சூழல் வந்துவிட்டது. இந்தப் படிப்பு படித்தால் தலைவராகிவிடலாம் என்னும் கல்வித்தகுதி எதுவும் கிடையாது. ஆனால் தலைமைக்கு என சில பண்புகள் நிச்சயமாக இருக்கவேண்டும். வருங்கால தேசத்தை கட்டமைக்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று தலைமைப்பண்பு. ஏனெனில்
இவர்கள்தான் சமூகத்தின் இணைப்புச் சங்கிலியாகத் திகழக்கூடியவர்கள்.
தலைமைப் பண்புகள் என்பதில்;
  1. பணியாள் மேலாண்மை
  2. குழுச்செயல்பாடு
  3. முடிவெடுக்கும் திறன்
  4. தகவல்தொடர்பாற்றால்
  5. ஊக்கப்படுத்தல்
  6. நடுநிலையோடு செயல்படல்
  7. நம்பிக்கைக்குரியவராய் இருத்தல்
  8. ஒற்றுமை பேணல்
  9. வேலைவாங்கும் திறன்
  10. முன்மாதிரியாக இருத்தல்
  11. திட்டமிடல்
  12. ஒழுங்குபடுத்தல்
  13. நேரமேலாண்மை
  14. இலக்குகளை நிர்ணயித்தல்
- என மிகப்பெரும் திறன்களை கொண்ட ஒரு முக்கியமான தகுதி நிலையே தலைமைப்பண்பு ஆகும். எனவே அது சார்ந்த பயிற்சிகளை அளிக்கும்பொழுது ஆசிரியர்கள் ஒற்றுமையாய் பணிபுரிந்து மாணவர்களையும் பள்ளிசார் சமூகத்தையும் முன்னேற்றிச் செல்ல இது முக்கியமான பயிற்சியாகத் திகழும்.
5) பல்திறன்அறிவு ( Multiple intelligence)
இதில் மிக முக்கியமானது;
  • அறிவுசார் நுண்ணறிவு
  • மனவெழுச்சிசார் நுண்ணறிவு
- என்பதாகும்..
ஒவ்வொருவரிடமும் பல்வகைத் திறன்கள் காணப்படுகின்றன. அவற்றிற்கு அடிப்படையாக அமைவது மேற்கண்ட நுண்ணறிவில் அறிவுசார் நுண்ணறிவு காரணமாக இருந்தாலும் கூட சில சூழல்களில் மனவெழுச்சியின் காரணமாக உந்தப்படும்பொழுது நம் செயல்பாடுகள் மாற்றம் பெறுகிறது.. அவை நல்லவிதமாகவும் அமையலாம்..தவறான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.ஆனால் அவைகளை கட்டுப்படுத்த முடியுமா என்றால் முடியாது..ஆனால் சரியான தடத்தில் அவைகளை கொண்டு செல்லமுடியும்... சின்ன சின்ன பயிற்சிகள் மூலம் செயல்பாடுகளை ஒழுங்கமைக்க முடியும். வலதுமூளை, இடதுமூளை செயல்பாடுகளையும், தன்னிடம் உள்ள திறன்களுக்கு காரணம், அவற்றை வளர்ப்பதற்குரிய பயிற்சிகளை வழங்குவதற்கு ஏதுவாக அமையும். இது மாணாக்கர்களை மிகச்சரியான வழிகளில் கொண்டு செல்ல பேருதவியாக அமையும்.
6) தியானப்பயிற்சி(Meditation)
இன்றைய சூழலில் ஆசிரியர்கள் பெரும்பாலும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானவர்களாகவும், சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் உடையவர்களாகவும் உள்ளனர். இதற்கு தியானப்பயிற்சி அளிப்பதன் மூலம் இவர்களது உடலையும் மனதையும் ஆரோக்கியமான முறையில் வைத்துக்கொள்ள முடியும். இதன் காரணமாக வகுப்பறையில் அவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் மகிழ்ச்சியாக மாணவர்களுடன் கற்றல் கற்பித்தல் செயல்களில் ஈடுபடுவர்.
மேற்கண்ட இப்பயிற்சிகளை உண்டு உறைவிடப் பயிற்சியாக வழங்கிட வேண்டும். அதன்மூலம் ஆசிரியர்களின் மனப்பான்மையை மாற்றம்பெறச் செய்தால் அவர்களால் மிகப்பெரும் வலுவான சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும். இல்லையேல் மனிதவளம் நிறைந்த நம் தேசம்... உருவத்தால் மட்டும் மனிதர்கள் கொண்ட தேசமாக உருமாறிப்போய்விடும். உதாரணம்... சர்வ சாதாரணமாக நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், குடும்ப உறவுமுறை சீர்குலைவுகள்... இவை எல்லாம் தொடர்கதையாக மாற்றம் பெற்றுவிடும்.
கல்விமுறை மாற்றம் என்பது தொழில்நுட்பமும், பாடப்புத்தகமும் சார்ந்ததாக இருப்பதில் பயனில்லை.. சுவர்களுக்கு வண்ணம் அடிப்பதால் மாற்றம் வந்துவிடாது. நம் எண்ணங்களை மாற்றம் செய்ய வேண்டும். நம்மால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் வேண்டும். முதலில் மாணவர்களது மனநிலையை பக்குவப்படுத்த வேண்டும்... அதற்கு ஆசிரியர்கள் முதலில் பக்குவமடைய வேண்டும்.. இந்தப் பயிற்சிகளை மட்டும் நடைமுறைப்படுத்தினால் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றத்தை நம் அரசுப்பள்ளிகளில் நம்மால் உருவாக்க முடியும்
தொடர்புக்கு - 9994119002