மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் தயார்

 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மூன்று விதமான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை; மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீத இட ஒதுக்கீட்டு முடிவுக்கும், சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், ஜூலை, 17ல் நடக்க இருந்த, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், ரத்து செய்யப்பட்டுள்ளது. 


எப்போது கலந்தாய்வு நடக்கும் என, மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை, ஆக., 31க்கும் முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால், மூன்று விதமான தரவரிசை பட்டியலை தயாரிக்கும் பணியில், மருத்துவ கல்வி இயக்ககம் ஈடுபட்டுள்ளது. கவுன்சிலிங் நடத்தும் முன்னேற்பாடுகளையும் துவக்கி உள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:

மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த, ஒரு மாதம் மட்டும் அவகாசம் உள்ளது. இதனால், தற்போது விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில், பிளஸ் 2 மதிப்பெண்; நீட் தேர்வு மதிப்பெண்; நீட் தேர்வு அடிப்படையில் இட ஒதுக்கீடு ஆகிய மூன்று விதமான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில், கவுன்சிலிங் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. எந்த தரவரிசை பட்டியல் அடிப்படையில், கவுன்சிலிங் நடைபெற வேண்டும் என்று அரசு தெரிவித்தால், அதன் பின், 24 மணி நேரத்தில், கவுன்சிலிங் நடத்த தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.