அடுத்த ஆண்டு +2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் சேர்க்கை நடக்குமா? அமைச்சரின் 'பகீர்' பதில்!

அடுத்த ஆண்டு 2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் சேர்க்கை நடக்குமா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்ததாவது:

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கும் 'நீட்' தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்பொழுது நடைமுறையில் உள்ள +2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் சேர்க்கை என்பதனை தொடர விரும்புவதாக நாங்கள் தெரிவித்துள்ளோம். ஆனால் அனைத்து மாநிலங்களும் ஒருமித்த குரலில் வலியுறுத்தும் பொழுது நாம் ஒன்றும் செய்ய முடியாது.

அதேபோல பட்ட மேற்படிப்புகளுக்கு நாம் 'டான்செட்' முறையினை பின்பற்றி வருகிறோம். அதனையும் மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.