Tuesday, June 13 பிளஸ் 1 வகுப்புக்கு வினா வங்கி புத்தகம்

நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், வினா வங்கி புத்தகம் வெளியிட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 1979ல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் அறிமுகமாகின. ஆனாலும், பிளஸ் 2வுக்கு மட்டுமே, பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 1க்கு, பள்ளிகள் மற்றும் மாவட்டங்கள் அளவில் தேர்வு நடத்தி, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். 


இந்நிலையில், மத்திய அரசின், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளில், தமிழக மாணவர்கள் போட்டி போட முடியாமல் திணறுவது, கல்வியாளர்கள் ஆய்வில் தெரிய வந்தது. அதனால், அண்ணா பல்கலை பரிந்துரைப்படி, நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

இதனால், 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு, வினா வங்கி புத்தகம் வெளியிடுவது போல, பிளஸ் 1க்கும், பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் வினா வங்கி புத்தகம் வெளியிட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதில், மாவட்ட அளவில், இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளின் முக்கிய வினாக்கள் இடம் பெறும் என, தெரிகிறது.