I.T.I, எனப்படும் தொழில் பயிற்சி நிறுவனங்களை பள்ளிகளாக மாற்ற அரசு முடிவு

நாடு முழுவதும் உள்ள, ஐ.டி.ஐ., எனப்படும் தொழில் பயிற்சி நிறுவனங்களை, முறையான பள்ளிகளாக மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும், ஆண்டுதோறும், பல லட்சம் பேர், ஐ.டி.ஐ., பயிற்சி முடிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 சான்றிதழ் இல்லாததால், மேற்படிப்புக்கு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. அதுபோலவே, தொழில் சார்ந்த பயிற்சி மற்றும் கடன்கள் பெறுவதிலும் சிக்கல் இருந்து வருகிறது. எனவே, ஐ.டி.ஐ.,க்களை, முறையான பள்ளிகளை போல, நாடு தழுவிய அளவில், ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இது குறித்து, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் நலத்துறை அமைச்சர், ராஜீவ் பிரதாப் ரூடி கூறியதாவது:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அல்லது தனியாக ஏற்படுத்தப்படும் வாரியத்தின் கீழ், ஐ.டி.ஐ.,க்கள் கொண்டு வரப்படும். இதன் மூலம், ஐ.டி.ஐ.,யில் பயிலும் மாணவர்களுக்கு, தேசிய அளவில் தேர்வு நடத்தப்பட்டு, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2க்கு நிகரான சான்றிதழ் வழங்கப்படும்.ஐ.டி.ஐ.,களுக்குரிய பாட திட்டத்தை, புதிய வாரியம் உருவாக்கும். இதுபோலவே, தொழிலாளர் நலத் துறை வசம் உள்ள, ஐ.டி.ஐ.,க்கள், இனிமேல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையின் கீழ் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.