சட்ட கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்ஜினியர்கள் அதிக ஆர்வம்!

திருச்சி: அரசு மற்றும் தனியார் துறைகளில், சட்டம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதால், இன்ஜினியரிங் படித்தவர்களும், சட்டப்படிப்பில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.

தமிழக அரசு சட்டக் கல்லுாரிகளில், எல்.எல்.பி., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், திருச்சி உட்பட, 10 அரசு சட்டக் கல்லுாரி களிலும் மூன்று நாட்களுக்கு முன் துவங்கியது. இதில், திருச்சி அரசு சட்டக் கல்லுாரியில், மூன்று ஆண்டு, எல்.எல்.பி., படிப்பில், 200 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில், இந்த படிப்பில் சேர்வதற்கு, 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றுள்ளனர். இதில் பி.இ., - பி.டெக்., மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் படித்தவர்களே அதிகமாக உள்ளனர். பி.இ., முடித்தவர்கள், 200க்கும் மேற்பட்டோர் சட்டப் படிப்பில் சேர விண்ணப்பம் வாங்கியுள்ளனர்.

இது குறித்து, திருச்சி அரசு சட்டக் கல்லுாரி முதல்வர், ராஜேஸ்வரன் கூறியதாவது:
திருச்சி அரசு சட்டக் கல்லுாரியில், கடந்த மூன்று ஆண்டுகளில், எல்.எல்.பி., படிப்பில் சேர்ந்தவர்களில், 20 சதவீதம் பேர் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள். தற்போது, இங்கு பல்வேறு இன்ஜினியரிங் பிரிவுகளில் படித்த, 130 பேர், எல்.எல்.பி., படித்து வருகின்றனர். சட்டம் படித்தால், நீதிமன்றத்தில் மட்டும் தான் வேலை வாய்ப்பு என்ற எண்ணம் மாறி விட்டது. சட்டப்படிப்பை முடித் தால், ஐ.டி., துறையிலும், மருத்துவமனைகளிலும் சட்ட ஆலோசகர்களாகவும் பணிபுரியலாம். சொந்தமாக வைத்துள்ள நிறுவனங்களை நிர்வகிக்கவும், பராமரிக்கவும், சமூக பிரச்னைகளை எதிர் கொள்ளவும் சட்டப்படிப்பு படிப்பதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.