அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்

நீட் தேர்வில், அரசுப் பள்ளியில் பயின்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் வெற்றி பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மருத்துவப்
படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டது.நிலா பாரதி (இடது), அன்பு பாரதி (வலது)
 நிலா பாரதி (இடது), அன்பு பாரதி (வலது)
நீட் தேர்வில் முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாணவ மாணவியும் இடம்பெறவில்லை என்பது வேதனையான விஷயம்தான். ரேங்க் பட்டியலில் இல்லாவிட்டாலும் நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
வந்தவாசியைச் சேர்ந்த அன்புபாரதி, நிலாபாரதி சகோதரிகள். வந்தவாசி அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் அன்பு பாரதியும் நிலா பாரதியும் பயின்றனர். நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் அன்பு பாரதி 1165 மதிப்பெண்களும், நிலாபாரதி 1169 மதிபெண்களும் பெற்றனர். இதனையடுத்து அவர்கள் நீட் தேர்வுக்கு ஆயத்தமாகினர்.
நீட் தேர்வை எதிர்கொண்டது குறித்து அவர்கள் 'தி இந்து'விடம் கூறும்போது, "பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் ஐந்து நாட்கள் ஓய்வு எடுத்தோம். பின்னர் நீட் தேர்வுக்காக திட்டமிட்டோம். நீட் 2014 தேர்வு வினாத்தாள், எய்ம்ஸ் முந்தைய வினாத்தாள்களை வாங்கி பயிற்சி மேற்கொண்டோம். பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் எங்களுக்கு அந்தக் கேள்விகள் புதிதாக இருந்தன. அதனால், சிபிஎஸ்இ 11, 12 வகுப்பு புத்தகங்களை வாங்கிப் படித்தோம்.
அதன் பின்னரே எங்களால் அந்தக் கேள்வித்தாளில் இருந்த வினாக்களுக்கு பதில் அளிக்க முடிந்தது. நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டுமானால் சிபிஎஸ்இ தரத்துக்கு பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்" என்றனர்.

நீட் தேர்வில் அன்பு பாரதி 151 மதிப்பெண்களும் நிலாபாரதி 146 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.