பிளாஸ்டிக் அரிசியா? புகார் எண்ணை அறிவித்தது தமிழக அரசு

பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அயனாவரம் பேருந்து பணிமனையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.


கடந்த சில தினங்களாக பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறது. மேற்கு வங்கம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. ஆனால் 'தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று உணவுத்துறை
அமைச்சர் காமராஜ் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் சென்னை அயனாவரம் பணிமனை கேண்டீனில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று அயனாவரம் பணிமனையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில் கேண்டீனில் பயன்படுத்தப்படுவது பிளாஸ்டிக் அரிசி இல்லை என உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவர் கதிரவன் கூறியுள்ளார். மேலும், மதுரை காமராஜர் சாலையில் உள்ள கடைகளிலும் உணவு பாதுகாப்புத் துறையினர் இன்று ஆய்வு செய்தனர். பிளாஸ்டிக் அரிசி குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது