பிரதமர் நரேந்திர மோடிக்கு மாணவியின் புகார் எதிரொலி அரசு பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி, சைக்கிள் நிறுத்துமிடம், ஆய்வுக்கூடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், பள்ளி அருகிலேயே செயல்படாமல் கிடக்கும் பொதுப்பணித்துறை கட்டடத்தை, பள்ளியின் பயன்பாட்டிற்கு தரக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இப்பள்ளி மாணவி சரஸ்வதி கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, பிரதமர் அலுவலகத்தில் இருந்து, கோரிக்கையை நிறைவேற்றுமாறு, தமிழக தலைமை செயலகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. பல மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அந்த மாணவி மீண்டும் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், 'நாங்கள் அனைவரும் பாசாகி விட்டோம். உங்கள் உத்தரவு இன்னும், பாசாகவில்லை' என, எழுதி இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வந்த, அமைச்சர் செங்கோட்டையன், கீரனுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வகுப்பறைகள், கழிப்பறை வசதி, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அருகில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின், மாணவி சரஸ்வதியை அழைத்து பாராட்டிய அமைச்சர் செங்கோட்டையன், 'உங்கள் உத்தரவு பாசாகி விட்டது' என, மீண்டும், 
பிரதமருக்கு கடிதம்எழுதும்படி கூறினார்.