அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்? - உயர்நீதி மன்றம் கேள்வி

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பினர்.
குமரி மகா சபை செயலர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மத்திய மற்றும் மாநில அரசின் பாடதிட்டங்களை பின்பற்றி தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா, சைனிக், மாநில அரசின் முப்பருவ கல்வி முறை அடிப்படையில் பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் கல்வி திட்டத்திற்கும், மாநில அரசின் கல்வி திட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது. கல்விக்காக தனியார் பள்ளிகளில் அதிக அளவு பணம் செலவு செய்ய வேண்டியதுள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும், என்ற நோக்கில் மத்திய அரசால் 1986-ம் ஆண்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. உண்டு உறைவிட பள்ளியான நவோதயா பள்ளிகள் மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்குகிறது. 6 முதல் பிளஸ் -2 வரை இரு பாலரும் படிக்கும் பள்ளியாக உள்ளது. குறைந்த கட்டணத்தில் கிராமப்புற மாணவர்கள் படிக்கும் வகையில் இப்பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகிறது.
ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவ்வகை பள்ளிகளை தொடங்க மாநில அரசு போதிய இடங்களை கொடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு இந்த பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்க வில்லை. எனவே தமிழகத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் துவங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ. செல்வம், என். ஆதிநாதன் அமர்வில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு வழக்கறிஞர் கோவிந்தன் வாதிடும்போது, தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகியவையே கற்பித்தல் மொழியாக உள்ளன.
நவோதயா பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. மேலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது தமிழக அரசின் கொள்கை முடிவு. தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்? என கேள்வி எழுப்பினர். பின்னர் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான அரசின் விளக்கத்தை தெரிவிக்க அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கி விசாரணையை நாளை புதன் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.