'நீட்' இழுபறி: இன்ஜி., கவுன்சிலிங்கில் சிக்கல்

நீட்' தேர்வில் இழுபறி நீடிப்பதால், தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இந்த மாதம் துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், மே, 7ல், 'நீட்' தேர்வு நடத்தப்பட்டது.


குழப்பம் : அதேநேரம், 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்துக்கு விலக்கு கேட்டு, தமிழக சட்டசபை யில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கு, ஜனாதி பதி ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. இதற்கிடை யில், 'நீட்' தேர்வு குறித்து, உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் தீர்ப்பு வெளிவராததால், மருத்துவ கவுன்சிலிங்கை, எப்படி நடத்துவது என, தமிழக சுகாதாரத் துறை குழப்பத்தில் உள்ளது. 

இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கின் தேதி தெரியாததால், இன்ஜி., கவுன்சிலிங் தேதியை முடிவு செய்வதில், உயர் கல்வித் துறையும் குழப்பத்தில் உள்ளது. இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு முடிந்து, விண்ணப்பங்கள் பரிசீலனை துவங்கியுள்ளது. வரும், 20ல், 'ரேண்டம்' எண் வெளியிடப்படுகிறது. 


கமிட்டி முடிவு : ஜூன், 22ல், தரவரிசை பட்டியல் தயார் செய்யப்படுகிறது. ஜூன், 27ல், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, கவுன்சிலிங் துவங்கலாம் என, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி முடிவு செய்துஉள்ளது. ஆனால், மருத்துவ கவுன்சிலிங் தள்ளிப்போனால், இன்ஜி., கவுன்சிலிங்கையும் தள்ளிப்போட வேண்டிய நிலை ஏற்படும்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவ கவுன்சிலிங்கிற்கு முன், இன்ஜி., கவுன்சிலிங் நடத்தினால், இன்ஜி., படிப்பில் சேரும் மாணவர்கள், பின், மருத்துவ இடம் கிடைத்ததும் சென்று விடுவர். அப்போது, முக்கிய கல்லுாரிகளில், 1,000க்கும் மேற்பட்ட இன்ஜி., இடங்கள் காலியாகி விடும். 

அதேநேரம், ஜூலை, 31க்குள் இன்ஜி., கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும் என்ற, உச்ச நீதிமன்ற உத்தரவையும் பின்பற்ற வேண்டும். அதனால், நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.