நீட் தேர்வில் விலக்கு கோரிய மனு தள்ளுபடி

சென்னையை சேர்ந்த முருகவேல் உள்பட 9 மாணவர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
2015–2016–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–2 முடித்து வெளியேறிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நாங்கள் பிளஸ்–1 படித்துவிட்டு, பிளஸ்–2 வகுப்பில் சேர்ந்தோம்.

எனவே, 2015–2016–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–2 முடித்துவிட்டு வெளியேறிய மாணவர்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் போது எங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதுபோன்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் 2016–2017–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–2 முடித்த எங்களுக்கும் நீட் தேர்வில் விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சுந்தர் ஆகியோர், ‘நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுக அனுமதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.