சட்ட படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பம்

 மூன்று புதிய கல்லுாரி கள் உட்பட, ஒன்பது அரசு சட்டக் கல்லுாரிகளில், விண்ணப்ப வினியோகம், நாளை துவங்குகிறது. தமிழகத்தில், ஆறு அரசு சட்டக் கல்லுாரி கள் செயல்பட்டு வந்த நிலையில், விழுப்புரம், தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில், புதிய சட்டக் கல்லுாரிகள் துவங்கப்பட உள்ளன. 



இவை உட்பட, ஒன்பது கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை, அம்பேத்கர் சட்ட பல்கலை துவக்கியுள்ளது. இந்த ஆண்டு, எந்த வயதைச் சேர்ந்தவர்களும், சட்டம் படிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள், நாளை முதல் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னை, அடையாறில் உள்ள சட்டப் பல்கலை மற்றும் அந்தந்த சட்டக் கல்லுாரிகளில், உரிய கட்டணம் செலுத்தி, விண்ணப்பங்களை பெறலாம். 

மூன்று புதிய கல்லுாரிகளுக்கு, கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்பம் கிடைக்கும். ஐந்தாண்டு பி.ஏ., - எல்.எல்.பி., படிப்புக்கு மட்டும், இன்று முதல், 23 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். மூன்றாண்டு படிப்புக்கு, ஜூன், 7 முதல், 17 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 


ஐந்தாண்டு படிப்புக்கு, பிளஸ் 2வும்; மூன்றாண்டு படிப்புக்கு, இளநிலை பட்டப் படிப்பும் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களை, http://tndalu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்