என்ஜினீயரிங் படிப்புக்கு 80 ஆயிரம் பேர் விண்ணப்பம் கலந்தாய்வு 27-ந்தேதி தொடங்குகிறது

தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தி வருகிறது. இந்த வருடமும் மாணவர்கள் சேர்க்கைக்கு எந்த வித நுழைவுத் தேர்வும் கிடையாது. கடந்த ஆண்டு போலவே பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. என்ஜினீயரிங் படிக்க தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பத்தை கடந்த மாதம் 1-ந்தேதி முதல் பதிவு செய்தனர்.


கடந்த மே 12-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

அதன்பிறகு மாணவ- மாணவிகள் எடுத்த மதிப்பெண்களை ஏற்கனவே ஆன்-லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்தனர். பதிவு செய்வதற்கு கடந்த மாதம் 31-ந்தேதி கடைசி நாள். ஆனால் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க ஜூன் 3-ந்தேதி கடைசி நாள்.

80 ஆயிரம் பேர்

1 லட்சத்து 70 ஆயிரத்து 578 பேர் விண்ணப்பத்தை பதிவு செய்தனர். ஆனால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அண்ணாபல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள். நேற்றைய நிலவரப்படி 80 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது ஏராளமானவர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவில்லை. விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் நம்பர் 20-ந்தேதி வழங்கப்படுகிறது. ரேங்க் பட்டியல் 22-ந்தேதி வெளியிடப்படுகிறது. அன்று மாணவர்கள் எத்தனாவது இடத்தில் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

கலந்தாய்வு

கலந்தாய்வு 27-ந்தேதி தொடங்குகிறது. கலந்தாய்வு ஒரு மாதம் நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், பதிவாளர் கணேசன், பேராசிரியர் இந்துமதி ஆகியோர் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டை விட விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

கடந்த ஆண்டு 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 90 ஆயிரம் பேர் தான் இடங்களை தேர்ந்து எடுத்தனர். ஆனால் இந்த வருடம் 80 ஆயிரம் பேர்தான் விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரமான கல்லூரிகளில் படிக்கவே மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். கலை அறிவியல் படிப்பில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதும் விண்ணப்பம் குறைந்ததற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.