கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் 6-ந் தேதி வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணை வழங்கும் விழா காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது.

விழாவில் பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு 491 மெட்ரிக் பள்ளிகள், 40 நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-



தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் கல்வித்துறையில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அரசு மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. உங்களுக்கும், எங்களுக்கும் போட்டி இல்லை. சிறப்பான திட்டங்களை படிப்படியாக கொண்டு வருகிறோம்.

கல்வித்துறை வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற மக்களின் நலன் கருதியும், தமிழக பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் வருகிற 6-ந் தேதி வெளியிடப்படும்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு

இந்தாண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.22 ஆயிரத்து 892 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 17 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளும், சுமார் 3 ஆயிரம் நர்சரி பள்ளிகளும் உள்ளன. உங்களுடைய சுற்றுப்புறத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நவீன கழிவறைகளை நீங்கள் கட்டித்தர வேண்டும். இதற்காக 5 ஆயிரம் கழிவறைகளை கட்டி தருவதற்காக தொழிற்சாலைகள் முன்வந்துள்ளன.


பள்ளி மாணவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளிலும் சீருடை மாற்றப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்- 2 வகுப்புகளை போலவே பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக அட்டவணை அறிமுகப்படுத்தப்படும்.

மெட்ரிக் பள்ளிகள் போல் அரசு பள்ளிகளிலும் மாதிரி தேர்வு வினாத்தாள்கள் வழங்கப்படும். பல்வேறு இடர்பாடுகள் வரும்போதும் அதை தாங்கக்கூடிய அரசாக இந்த அரசு உள்ளது. இந்த அரசு நிலைத்து நிற்குமா என்கிறார்கள். 5 ஆண்டுகள் மட்டும் இல்லாமல் 50 ஆண்டுகள் அரசு நீடித்து நிலைத்து நிற்கும். பள்ளி கல்வித்துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் புரட்சி செய்ய உள்ளோம்.

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு ஒன்றியங்களிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். மாணவர்களுக்கு யோகா கற்றுதரப்படும். பள்ளி கட்டிட அனுமதிக்கு வீட்டு வசதித்துறை அமைச்சரிடம் பேசி நல்ல முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விளையாட்டு மைதானம்

இதைத்தொடர்ந்து, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், வேலூர் மற்றும் திருச்சி, கோவையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க தலா ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு கல்வி நிர்ணய கட்டண குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டண பட்டியல் வெளியிடப்படும். குறைந்த மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள் மூட வாய்ப்பில்லை என்றார்.

விழாவில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் பேசினர்.