பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் 37 அறிவிப்புகளால், யார் யாருக்கு என்ன பலன்?

கடந்த இரண்டு மாதங்களாக '41 அறிவிப்புகள் வெளியிடுவேன்' என்றும், 'அந்த அறிவிப்புகளால் நாடே திரும்பிப் பார்க்கும்' என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில்
தெரிவித்துவந்தார். இதனால் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்புகள்குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்துவந்தது. நேற்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் 37 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இவற்றை ஏழு வகைகளாகப் பிரித்திருக்கிறோம். ஒவ்வொரு பிரிவின் கீழ் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என்பதைப் பார்ப்போம்.
மாணவர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:
புதியதாக 30 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் புதுமைகளைப் புகுத்தி சிறப்பாகச் செயல்படும் நான்கு அரசுப் பள்ளிகளைக் கண்டறிந்து `புதுமைப் பள்ளி' விருது 1.92 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலுக்கான அட்டைகளை வாங்க 31.82 கோடி ரூபாய் செலவிடப்படும். 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினிவழிக் கற்றல் மையங்கள் அமைக்க 6.71 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும், நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் 5,639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 22.56 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். 31,322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 4.83 கோடி ரூபாய் செலவில் நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
பள்ளிக்கல்வித் துறை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு 39.25 கோடி ரூபாய் செலவில் கற்றல் துணைக் கருவிகள் வழங்கப்படும் என்றும், திறனறித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு 2.93 கோடி ரூபாய் செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனித்திறமையோடு விளங்கும் 100 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று கோடி ரூபாய் செலவில் மேலைநாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகை பிரிவுகளில் பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ஒரு மாபெரும் மாணவர் கலைத் திருவிழா நான்கு கோடி செலவில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடர்வதற்கு உதவிடும் வகையில் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படும். ஒன்றிய அளவில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மேற்படிப்பு / வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வுகளுக்கு வழிகாட்டி மையங்கள் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்படும். மேலும், கருத்தரங்குகள் இரண்டு கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஆசிரியர் நலன் சார்ந்த அறிவிப்புகள்:
4,084 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாகச் செயல்படும் ஆறு ஆசிரியர்களுக்குக் கனவு ஆசிரியர் விருதும், 10,000 ரூபாய் ரொக்கப் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க தொடர் நீட்டிப்பு கோரப்படும் 17,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும் என்றும், சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மின் ஆளுமை சார்ந்த அறிவிப்புகள்:
காணொளி பாடங்கள், கணினிவழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் உள்ளடக்கிய கற்றல் மேலாண்மைத் தளம் இரண்டு கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். அரசுத் தேர்வுகள் இயக்ககச் செயல்பாடுகள் இரண்டு கோடி ரூபாய் செலவில் கணினி மயமாக்கப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடங்க அனுமதி/ அங்கீகாரம்/ தொடர் அங்கீகாரம் வழங்க இணைய வழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நூலகத் துறை சார்ந்த அறிவிப்புகள்:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்பொது நூலகங்களுக்கு 25 கோடி ரூபாய் செலவில் புதிய நூல்களும், அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ஆறு கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் சிந்துசமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த நூலகமும், தஞ்சாவூரில் தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் சார்ந்த நூலகமும், மதுரையில் நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த நூலகமும், திருநெல்வேலியில் தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகமும், நீலகிரியில் பழங்குடியினர் பண்பாடு சார்ந்த நூலகமும், திருச்சியில் கணிதம், அறிவியல் சார்ந்த நூலகமும், கோயம்புத்தூரில் வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் சார்ந்த நூலகமும், சென்னையில் அச்சுக்கலை சார்ந்த நூலகம் என்று தனித்தன்மை வாய்ந்த எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் எட்டு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மாவட்ட மைய நூலகங்களில் போட்டித்தேர்வுப் பயிற்சி மையங்கள் 72 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். 123 முழுநேரக் கிளை நூலகங்களில் மின்னிதழ் வசதிகளுடன்கூடிய கணினி வசதி 1.84 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். இரண்டு கோடி ரூபாய் செலவில் நவீன மின் நூலகம் அமைக்கப்படும். அரிய வகை நூல்கள் மற்றும் ஆவணங்களைப் பொதுமக்களிடமிருந்து கொடையாகப் பெறும் திட்டம் தொடங்கப்படும். அரியவகை நூல்களைப் பாதுகாத்துவரும் தனியார் அமைப்புகள் நடத்திவரும் நூலகங்களுக்குப் பராமரிப்பு நிதி வழங்கப்படும். நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் ஐந்து கோடி ரூபாய் செலவில் மொழிபெயர்க்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நிர்வாகம் சார்ந்த அறிவிப்புகள்:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் 60 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையின் அலுவலர்களுக்கு 2.89 கோடி ரூபாய் செலவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி சார்ந்த அறிவிப்புகள்:
மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு இணையான சமநிலைக் கல்வித் திட்டம் 13.94 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச அளவில் பரவியுள்ள தமிழர் நலன்:
உலக நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் கற்பித்தலுக்குத் தேவையான தமிழ்ப் பாடநூல்கள் அனுப்புதல், சிறந்த தமிழாசிரியர்கள் மூலம் பயிற்சி மற்றும் இணைய வழியில் தமிழ் கற்பித்தல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தவும், உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் கொடையாக வழங்கப்படும். இதில் முதற்கட்டமாக, யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கும் மலேயாப் பல்கலைக்கழக நூலகத்துக்கும் ஒரு லட்சம் நூல்கள் கொடை என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்தத் திட்டங்கள் குறித்து, கல்வியாளர்கள் சிலரிடம் கருத்துகளைக் கேட்டோம்.
பள்ளிக்கல்வித்துறைதமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமி. சத்தியமூர்த்தி கூறியதாவது...
தொடக்கப் பள்ளிகளில் புத்தகங்கள், வார இதழ்கள், தினசரி பத்திரிகைகள் வாங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் கல்வித் துறை அமைச்சர். இதனால் மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தவிர இதர விஷயங்களையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல விஷயமே. ஆனால், பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் சரியான முறையில் தினசரி செய்தித்தாள்களையும், இதழ்களையும் வாங்குகிறார்களா என்பது தெரியாது. இதைத் தவிர்க்கும்விதமாக அரசே நேரிடையாகப் பள்ளிகளுக்கு புத்தகங்கள், வார இதழ்கள், தினசரி பத்திரிகைகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் நாப்கின் எரியூட்டுதலுக்கு இயந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் சிறப்பு. தற்போது சுகாதாரமான முறையில் நாப்கின் அகற்றப்படாமல் சுகாதார பிரச்னையைச் சந்திக்கும்வகையில் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.
பள்ளிகளைக் கண்காணிக்க, கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாகன வசதி இல்லாமல் இருந்தது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் பல பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லாமல் இருந்தார்கள். தற்போது வாகனங்கள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம் இனி கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு அடிக்கடி ஆய்வுக்குச் செல்ல வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
கணினி வசதியை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இந்த நிதியில் பள்ளிகளில் வைஃபை வசதியையும் இணைய வசதியையும் ஏற்படுத்திட வேண்டும். மேலும், பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறார்கள். கணினி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றமே. இனிவரும் காலங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
பள்ளியில் கழிப்பிட வசதி குறித்து பலரும் பேசிவருகிறார்கள். ஆனால், துப்புரவாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. மேலும், துப்புரவாளர்களுக்கு மாதச் சம்பளமாக 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது மிகவும் குறைந்த தொகை என்பதால், துப்புரவுப் பணிக்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதச் சம்பளமாக வழங்கப்படும் தொகையை அதிகரிக்க வேண்டும். இனிவரும் அறிவிப்புகளில் இதை வெளியிட்டால் கல்வித் துறை மேம்படும்" என்கிறார் சாமி. சத்தியமூர்த்தி.
`பொதுப்பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவுடன் பேசினோம்.
பள்ளிக்கல்வித்துறை  கல்வியாளர் கஜேந்திர பாபு "பள்ளிகளை மூடுவோம் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்குப் பதிலாக, 30 தொடக்கப் பள்ளிகளை ஆரம்பிப்போம் என்பதும், பள்ளி மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் திட்டம், பள்ளிகளில் தினசரி செய்தித்தாள்கள், வார இதழ்கள், புத்தகங்கள் வாங்க வழி செய்திருப்பது எனப் பல அறிவிப்புகளும் வரவேற்புக்குரியவைதான்.
அரசுப் பள்ளிகள் `அருகாமை பள்ளிகளாக' அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் சார்ந்த வேலையோடு பல்வேறு பணிகளைக் கொடுக்கிறார்கள். இதனால் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், கற்றல் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உடற்பயிற்சி ஆசிரியர், இசை ஆசிரியர், ஓவிய ஆசிரியர் பணிகளை நியமித்தல் குறித்த அறிவிப்பும் இல்லை. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய ஆசிரியர் பணியிடங்கள் மறைந்துவிட்டன. இத்தகைய ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே சமமான கற்றலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்த அறிவிப்பில் `யோகாவைக் கட்டாயப்படுத்துவோம்' என்பதை எதிர்க்கிறோம். இது, தனிமனிதத் தேவையில் குறுக்கிடுவதுபோல் இருக்கிறது. குழந்தைகளின் மீது குறிப்பிட்ட ஒரு விளையாட்டையோ அல்லது செயல்பாட்டையோ திணிப்பது என்பதை அனுமதிக்கக் கூடாது. ஒரு கலாசாரத்தையோ, முறையோ திணிப்பது என்பது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.

ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தும் வேளையில் வெயிட்டேஜ் முறையைக் கொண்டுவந்தார்கள். இந்த முறை ஆசிரியர் தகுதித்தேர்வைத் தகுதியிழக்கச் செய்கிறது. 120 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காமல், 92 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்கிறது. குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என நிர்ணயித்துவிட்டு, அதில் வெயிட்டேஜ் என்று பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணிலிருந்து கணக்கில் எடுத்துக்கொண்டு நிர்ணயிப்பது என்பது சரியான முறை அல்ல. இந்த வெயிட்டேஜ் முறை கைவிடுவதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. இந்த அறிவிப்புகள் எல்லாம் சேர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்கிறார்.