24 போலி பல்கலைகள் : யு.ஜி.சி., பகிரங்கம்

நாடு முழுவதும், 24 போலி பல்கலைகள் செயல்படுகின்றன; இப்பல்கலைகள் வழங்கும் சான்றிதழ்களுக்கு எவ்வித அங்கீகாரம் இல்லை' எனக் கூறி, பல்கலை மானியக்குழு பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் கல்வியாண்டு துவக்கத்தில், நாடு முழுவதும் செயல்படும் போலி பல்கலைகளின் பெயர்களை, மாணவர்கள் நலன் கருதி, யு.ஜி.சி., வெளியிடுவது வழக்கம்.
கடந்த கல்வியாண்டில், 22 பல்கலைகளின் பெயர்கள், இப்பட்டியலில் இடம்பெற்றன. நடப்பு கல்வியாண்டில், 24 பல்கலைகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.


ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பல்கலையின் பெயரும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைவதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா, கேரளா, பீஹார், மஹாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒன்று, மேற்கு வங்கம், ஒடிசாவில் இரண்டு, டில்லியில் ஆறு, உ.பி.,யில் ஒன்பது, என, 24 பல்கலைகள் போலி பல்கலைகளாக நடப்பு கல்வியாண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.