புதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடும் பணி துவக்கம்

புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. இப்புதிய நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழயை ஒழிக்கும் பொருட்டு ரூ. 500 மற்றும் ரூ1000 நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவ., 8ம் தேதி மத்திய அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து பண நெருக்கடியை சமாளிக்க, பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது.

இந்நிலையில் பணப் பரிவர்த்தனையை எளிமையாக்கும் நோக்கில், புதிய ரூ.200 நோட்டுகளை அச்சிட முடிவு செய்த ரிசர்வ் வங்கி, அதற்கான பணியை துவக்கியுள்ளது. மேலும் இந்த புதிய 200 ரூபாய் நோட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடனும், கள்ள நோட்டுகள் அச்சிடாதவாறும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரூபாய் நோட்டுகளின் தர சோதனைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ம.பி., மாநிலம் ஹோசங்காபாத்தில் மத்திய அரசு ஆய்வு செய்தது. இதனையடுத்து புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் இடங்களான, கர்நாடக மாநிலம் மைசூரிலும், மேற்குவங்க மாநிலம் சல்போனியிலும் நடைபெற்று வருகிறது விரைவில் இப்புதிய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.