பிளஸ் 1க்கான கேள்வித்தாள் ஜூலையில் வெளியாகும்

பிளஸ் 1 வகுப்புக்கான மாதிரி கேள்வித்தாள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2
வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்குரிய கேள்வித்தாளை வடிவமைக்க புதிய குழுவை பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது. முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் தேவராஜன் இந்த குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதற்கட்டமாக இந்த குழு நேற்று டிபிஐ வளாகத்தில் கூடி கேள்வித்தாள் பற்றி ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை வெளிக் கொண்டு வரும் வகையில் கேள்வித்தாள் அமைக்கப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்த குழுவின் தலைவர் தேவராஜன் கூறியதாவது: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் அறிவு மற்றும் திறன்களை வெளிக் கொண்டு வரும் வகையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட உள்ளன.

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த வகுப்பு மாணவர்கள் போட்டித் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் கேள்வித்தாள் இருக்கும். பாடங்களை முழுமையாக படித்தால் தான் அதிக மதிப்பெண் பெற முடியும். சராசரி மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் இடம் பெறும். மாதிரி கேள்வித்தாள் ஜூலை முதல் வாரத்தில் தயாராகிவிடும். பின்னர் அவை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். அதேபோலவே மற்ற பொதுத்தேர்வுக்கும் கேள்வித்தாள் வடிவமைக்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. வல்லுநர்களுடன் ஆய்வு செய்து விரைவில் கேள்வித்தாள் வெளியாகும். இவ்வாறு தேவராஜன் தெரிவித்தார்