15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசு பாடத்திட்டத்தில் யோகா மற்றும் சாலை விதிகள் விரைவில் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 41 அதிரடி அறிவிப்புகள் பற்றி வரும் 15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கு வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு புத்தகங்கள் ,சீருடை ஆகியவற்றை வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு பாடபுத்தகம், சீருடை வழங்கிய பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். தனியாருக்கு இணையாக தமிழக பள்ளிக்கல்வித் துறை திகழ்ந்துக் கொண்டிருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கோடை விடுமுறை முடிந்து விட்டது. மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்துள்ளனர். வானமே பூ மழை தூவி வருங்கால கல்வியாளர்களை வாழ்த்தி வரவேற்கிறது. சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை திறந்த தரத்துடன் திகழ்கிறது. மத்திய அரசு தேர்வுகளை மாணவர்கள் எதிர்க்கொள்ளும் வகையில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும் 
பள்ளிக்கல்வித்துறையில் நேற்று அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறியிருந்தார் செங்கோட்டையன். அது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், 15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார். 
நீட் தேர்வு பற்றி நாங்கள் கூறவில்லை. நீட் வேறு பொது தேர்வு வேறு. மத்திய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை பற்றிய அறிவிப்பை சாதாரணமாக வெளியிடுவதை விட மானியக்கோரிக்கையில் வெளியிட்டால் அது சட்டசபை வரலாற்றில் இடம் பெறும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் செங்கோட்டையன் என்று கல்வியாளர்கள் கூறியுள்ளனர்