அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று
பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதன்மை கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வை மேற்கொள்ள வேண்டும்.
ஜூன் மாதம் 6, ஜூலை மாதம் 6, ஆகஸ்ட் 6, செப்டம்பர் 2, அக்டோபர் 5, நவம்பர் 5, டிசம்பர் 2, ஜனவரி 4, பிப்ரவரி 2 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.முதன்மை கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வின் போது, ஆசிரியர்கள் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, பள்ளியின் தளவாட பொருட்கள் கணினி, தொலைக்காட்சி மற்றும் நூலக பயன்பாடு சார்ந்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள், பழுதடைந்துள்ள கட்டிடங்கள் போன்றவை மாணவர்களுக்கு பாதுகாப்பற்றதாக ஆய்வின் போது கண்டறியப்பட்டால் அதனை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேல்நிலை அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் பராமரிக்கப்படும் மாணவர் சேர்க்கை பதிவேடு, ஆசிரியர் வருகைபதிவேடு, அரசு வழங்கும் நலத்திட்ட பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான பதிவேடு, இருப்பு பதிவேடு மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மூலமாக வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் மானியங்கள் குறித்த பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வின் போது பரிசீலிக்க வேண்டும். ஆண்டாய்வு மேற்கொள்ளும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அக்குறைபாடுகளை களைய சார்ந்த பள்ளிக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின் மீண்டும் ஒருமுறை அப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வின் போது குறிப்பிட்ட குறைபாடுகள் களையப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தல் வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.