61 லட்சம் மாணவருக்கு இலவச காலணிகள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின், 61 லட்சம் மாணவர்களுக்கு, கருப்பு மற்றும் காக்கி நிற காலணிகள் வழங்கப்பட உள்ளன. ஐந்து ஆண்டுகளாக, பள்ளி மாணவர்களுக்கு, 14 வகை இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இரண்டு ஆண்டுகளாக, புத்தகம், நோட்டு தவிர, மற்ற இலவச பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு, அனைத்து இலவச பொருட்களையும், விடுபடாமல் வழங்க முடிவு செய்யப்பட்டு, கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன், பாட புத்தகங்களும், நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு காக்கி நிறத்திலும், மாணவியருக்கு கருப்பு நிறத்திலும், 'பெல்ட்' வைத்த, பி.வி.சி., காலணிகள் வழங்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டுகளில், காலணிகளை கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன; துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், எந்த முறைகேடுமின்றி, தரமான காலணிகளை மாணவர்களுக்கு வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. வரும், 28ம் தேதி, இதற்கான, 'டெண்டர்' இறுதி செய்யப்பட உள்ளது. செப்டம்பருக்குள் காலணிகளை தயாரித்து முடிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. 
உற்பத்தியாகும் காலணிகளை, ஆகஸ்ட் முதல், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மொத்தம், 61.22 லட்சம் பேருக்கு, காலணிகள் வழங்கப்பட உள்ளன.