பிளஸ் 2 தேர்வில் 'கிரேடு' இல்லை: தேர்வு துறை விளக்கம்

பிளஸ் 2 தேர்வில், எந்தவித கிரேடு முறையும் அறிமுகப்படுத்தவில்லை' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.



இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:


பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடும்போது, புள்ளி விபரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கை, ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. அதில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள், ஒன்பது பிரிவுகளாக தெரிவிக்கப்பட்டன. அதில், ஆங்கில அகர வரிசை குறிப்பிடப்பட்டது. ஆனால், அதை, 'கிரேடு' முறை என, சில ஊடகங்கள் தவறாக செய்திவெளியிட்டுள்ளன.

ஆனால், தேர்வுத் துறை எந்தவிதமான, 'கிரேடு' முறையையும் அறிமுகம் செய்யவில்லை. மாணவர்களுக்கான சான்றிதழில், சென்ற ஆண்டு போல், மதிப்பெண்கள் மட்டுமே இடம் பெறும்; 'கிரேடு' எதுவும் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.