பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மாதிரி தேர்வு

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 'ஆன்லைனில்' மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம், 'ரேங்கிங்' முறைக்கு முற்றுப்புள்ளி, பாடத்திட்ட மாற்றம் என, பல்வேறு நடவடிக்கைகளை, கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
அறிமுகம் : அந்த வரிசையில், இணையவழி கற்றல் மேலாண்மை தளம் என்ற, 'ஆன்லைன்' கற்றல் திட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரனின் மேற்பார்வையில், 'டிஜிட்டல்' திட்ட பணிகள் துவங்கிஉள்ளன.
'இ - லேர்னிங்' இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு, பயன்பாட்டு குறியீடு எண், 'பாஸ்வேர்ட்' என்ற ரகசிய எண் வழங்கப்படும்.
இதன் மூலம், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், இணைய தளத்தை பயன்படுத்தலாம். இதில், பொது தேர்வுகளுக்கான வல்லுனர்களின் பாடக்குறிப்புகள், வினாக்கள், விளக்கங்கள், சிந்தனையை துாண்டும் கேள்விகள் இடம்பெறும்.
தேர்வு பயம் : மேலும், 'நீட்' ஜே.இ.இ., கிளாட், சி.ஏ., போன்ற நுழைவு மற்றும் போட்டி தேர்வுக்கான வினாக்களும் இருக்கும். மாணவர்கள், எப்போது வேண்டுமானாலும், இணையதளத்தில் மாதிரி தேர்வை எழுதலாம். பெரும்பாலும், 'அப்ஜெக்டிவ்' வகை கேள்விகள் இருக்கும். 
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, முந்தைய பொது தேர்வுகளின் வினாக்கள் இடம்பெறும். இதற்கு, மாணவர்கள் பதில் அளிக்கலாம். தவறான பதில் அளித்தால், விடைக்கான குறிப்பை, ஆன்லைனில் பெறலாம். தேர்வு குறித்த பயம் நீங்கும் வகையில், மாதிரி தேர்வு அமையும். அதேபோல், மனப்பாட கல்வியை மாற்றி, புத்தகத்தின் அனைத்து பகுதிகளையும் புரிந்து படித்து, பதில் அளிக்கும் வகையில், வினாக்கள் இடம்பெற உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.