பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 10 நிமிடங்களில் மாணவர்களுக்கு மதிப்பெண் விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 10 நிமிடங்களில் மாணவர்களுக்கு மதிப்பெண் விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு | பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 10
நிமிடங்களில் மாணவர்களுக்கு தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண், எஸ்.எம்.எஸ். மூலம் செல்போனுக்கு அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:- ஏற்கனவே திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த தேர்வை எழுதிய மாணவர்களில் 9 லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.. ஒவ்வொரு பள்ளியிலும் கேட்டு அவர்களது செல்போன் எண்களை வாங்கிவிட்டோம். 95 சதவீத மாணவர்களின் அல்லது பெற்றோரின் செல்போன் எண்கள் கிடைத்துள்ளன. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான 10 நிமிடங்களில், எஸ்.எம்.எஸ். மூலம் அந்தந்த எண்களுக்கு தேர்வு முடிவும், அவர்களின் மதிப்பெண் பட்டியலும் அனுப்பப்பட்டுவிடும். இந்தியாவிலேயே இதுதான் முதன் முறை. இது தமிழகத்துக்கும், தமிழக அரசுக்கும் பெருமை சேர்க்கும் நடவடிக்கையாகும். சான்றிதழில் தமிழில் பெயர் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்போது அதில் இதுவரை ஆங்கிலத்தில்தான் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழிலும் அவர்கள் பெயர் குறிப்பிடப்படுகிறது. அதன்படி, ஆங்கிலம் மற்றும் தமிழில் அவர்களின் பெயர் இடம்பெறும். மின் ஆவணக் காப்பகம் மூலம் மாணவர்களின் சான்றிதழை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில மாணவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைப்பதில்லை என்பதற்காக அவர்களின் சான்றிதழை பேணிக்காப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பார்க்கும்போது விரைவாக பார்க்க முடிவதில்லை என்ற குறைபாடு உள்ளது. அதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 4 இணையதளங்கள் இதை வழங்கவுள்ளன. புதிய கல்வி கொள்கை தொடர்பான விஷயங்கள் அனைத்தும் பரிசீலனையில் உள்ளன. இதுதொடர்பாக ஆலோசித்துவிட்டு முழு தகவலை வெளியிடுவோம். மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகை பொருட்களும் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்கப்பட்டுவிடும். அதில் தடை எதுவும் இருக்காது. தோல்வி அடையும் மாணவர்களுக்கு 104 போன் எண் மூலம் ஆலோசனை வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது. 25 சதவீத இடஒதுக்கீட்டில் எத்தனை மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது என்பது ஜூன் மாதத்தில் தெரிய வரும். அந்த இடஒதுக்கீட்டை வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் எடுப்பது பற்றிய குற்றச்சாட்டுகள் சில பள்ளிகள் மீது வந்துள்ளன. அதுபற்றி கவனிக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரை பார்வையிடச் சொல்லி, அதில் உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம். நீட் தேர்வு முடிந்துள்ள நிலையில் மாநில பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி பரிசீலித்துக்கொண்டிருக்கிறோம். சட்டசபையில் கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது அதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். நீட் தேர்வைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி அரசு பரிசீலிக்கிறது. இதில் கல்வித்துறை செயலாளர் சில கருத்துகளை வழங்கியுள்ளார். அதன்படி என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என்பது விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.