மேல்நிலை பள்ளிகளை முந்திய உயர்நிலை : 12 சதவீதம் அதிக தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சியில், மேல்நிலைப் பள்ளிகளை விட, உயர்நிலைப் பள்ளிகள் முந்திஉள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வில், வழக்கம் போல, அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. 
100 சதவீத தேர்ச்சியிலும், அரசு பள்ளிகளை விட, இரு மடங்கு அதிகமாக, தனியார் பள்ளிகள் சாதனை படைத்துள்ளன. அதே நேரத்தில், தேர்ச்சி விகிதத்தில், மேல்நிலைப் பள்ளிகளை விட, உயர்நிலைப் பள்ளிகள் அதிகளவில், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
 100 சதவீத தேர்ச்சி பெற்ற, 5,059 பள்ளிகளில், 44 சதவீதமாக, 2,232 மேல்நிலைப் பள்ளிகளும்; 56 சதவீதமாக, 2,827 உயர்நிலைப் பள்ளிகளும் இடம் பெற்றுள்ளன. அதாவது, மேல்நிலைப் பள்ளிகளை விட, 12 சதவீதம் கூடுதலாக, உயர்நிலைப் பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன
 அரசு பள்ளிகளை பொறுத்தவரை, 10ம் வகுப்பு வரை மட்டுமே நடத்தப்படும், 2,826 உயர்நிலைப் பள்ளிகளில், 41 சதவீத பள்ளிகளும்; பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 2,637 மேல்நிலைப் பள்ளிகளில், 14 சதவீத பள்ளிகளும், ௧௦௦ சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அதாவது, அரசு மேல்நிலைப் பள்ளிகளை விட, அரசு உயர்நிலைப் பள்ளிகள், 27 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளன
இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: உயர்நிலைப் பள்ளிகளில், சீனியர் மாணவர்களான, 9, 10ம் வகுப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஆசிரியர்கள் பாடம் நடத்துவர்; சிறப்பு பயிற்சிகளும் வழங்குவர். மேல்நிலைப் பள்ளி களில், பிளஸ் 2 பொது தேர்வுக்கே முக்கியத்துவம் அளிப்பர்; 10ம் வகுப்புக்கான முக்கியத்துவம் குறையும். நிர்வாக ரீதியான இந்த காரணங்கள் தான், உயர்நிலைப் பள்ளி களில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.