அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' ஒத்திவைப்பு

அமைச்சர்கள் உறுதிமொழியை ஏற்று, ஜூலை மாதம் வரை போராட்டத்தை ஒத்தி வைப்பதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் நேற்று முன்தினம் காலவரையற்ற ஸ்டிரைக்கை துவக்கினர். நேற்று இரண்டாவது நாளாக, ஸ்டிரைக் நீடித்தது. இதனால், அரசு பணிகள் முடங்கின. போராட்டத்தில் ஈடுபட்ட, சங்கங்களின் 
நிர்வாகிகளுடன், தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், நிதித்துறை செயலர் சண்முகம் ஆகியோர் பேச்சு நடத்தினர். கோரிக்கைகளை, ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்றித் தருவதாக, அமைச்சர்கள் உறுதி அளித்தனர். அதை ஏற்று போராட்டத்தை, ஜூலை வரை ஒத்தி வைப்பதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்தது. இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, மாநில பொதுச்செயலர் அன்பரசு கூறுகையில், ''எங்கள் கோரிக்கைகளை உறுதி அளித்தபடி, ஜூலைக்குள் நிறைவேற்ற வேண்டும்; இல்லாவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.