அரசு கல்லூரிகளுக்கு 'நாக்' அந்தஸ்து

திருச்சி மற்றும் திருநெல்வேலி அரசு கல்லுாரிகள் உட்பட, எட்டு கல்லுாரிகளுக்கு, தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின், 'நாக்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், கல்வித்தரம், உயர்கல்விக்கு சென்ற மாணவர்கள் விகிதம், கல்லுாரிகளின் ஆராய்ச்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில், தேசிய அளவில், 'நாக்' அந்தஸ்து வழங்கப்படும். ஒவ்வொரு 


கல்லுாரியும், தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின், இந்த அந்தஸ்தை பெறுவது கட்டாயம். இதன்படியே, பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் மானியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தரம் வழங்கும் முறையில், 2016 ஜூலை முதல், புதிய முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, மார்ச் மாதம் வரை, 1,400 கல்வி நிறுவனங்களுக்கு, நாக் அந்தஸ்து வழங்கப்பட்டுஉள்ளது. கடந்த வாரம் நடந்த கமிட்டியின் பரிசீலனையில், தமிழகத்தில், புதிதாக எட்டு கல்லுாரிகளுக்கு, 'நாக்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 
திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லுாரி, திருச்சியிலுள்ள ஈ.வெ.ரா., பெரியார் கல்லுாரி மற்றும் கோவை விமானப்படை நிர்வாகக் கல்லுாரி ஆகியவை, 'ஏ' கிரேடு பெற்று உள்ளன. மேலும், ஐந்து தனியார் 
கல்லுாரிகள், பி, பி பிளஸ் தரம் பெற்றுள்ளன.