சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மவுசு

நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.


தமிழகத்தில், சமச்சீர் கல்வியில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மாநில பாடத்திட்டம் இணைக்கப்பட்டு, பாடம் கற்று தரப்படுகிறது. இந்த திட்டத்தில், 12 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நீட் 

நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மருத்துவப் படிப்புகளில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. முன், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்த மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க, மாநில பாடத்திட்டத்துக்கு மாறி வந்தனர். ஆனால், நீட், ஜே.இ.இ., உட்பட நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாகி வருவதால், மீண்டும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 
இது குறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர்கள் சிலர் கூறுகையில், 'தேசிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற, எளிதாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மாணவர்கள் சேர்கின்றனர். அதனால், 8ம் வகுப்பு வரை மட்டும் பாடம் நடத்திய பல பள்ளிகள், மேல்நிலை கல்வி வரை, சி.பி.எஸ்.இ., திட்டத்தில் அனுமதி கேட்டு வருகின்றன' என்றனர்.