'டெட்' தேர்வு கண்காணிப்பு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு பின், வரும், 29, 30ல், 'டெட்' தேர்வு நடக்கிறது. மாநிலம் முழுவதும், 1,861 மையங்களில், இந்த தேர்வு நடக்கிறது; 8.47 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன்
மேற்பார்வையில், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது. 
இந்த குழுவினருக்கு, மண்டலம் மற்றும் மாவட்ட வாரியாக பணிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
வரும், 29ம் தேதி, 598 மையங்களில், 'டெட்' முதல் தேர்வு நடக்கிறது. மறுநாள், 963 மையங்களில், இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு, 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 18 ஆயிரம் ஆசிரியர்கள், கண்காணிப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். 
அவர்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

அதன் விபரம்:

● தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், காலை, 7:30 மணிக்கே, மையத்திற்கு வந்துவிட வேண்டும். ஆசிரியர்களின் முன்னிலையில் மட்டுமே, முதன்மை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுகளை பிரிக்க வேண்டும்
● தேர்வறையில், எந்த உணவுப் பொருட்களையும் அனுமதிக்கக் கூடாது. ஆசிரியர்களும் உணவு உட்கொள்வது, நொறுக்கு தீனி சாப்பிடுவது கூடாது. நீரிழிவு நோய் பிரச்னை இருந்தால், அதற்கான மருந்தை எடுத்து கொள்ளலாம் 
● காப்பியடிக்கவோ, முறைகேட்டில் ஈடுபடவோ உதவக் கூடாது 
● தேர்வு எழுதுவோரை கண்காணிக்காமல், நாற்காலியில் உட்கார்ந்து, புத்தகம் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இவ்வாறு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.