இன்ஜினியரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை

இன்ஜினியரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண்
கட்டாயமல்ல என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.இன்ஜினியரிங் கவுன்சலிங் 2017க்கான அறிவிக்கை ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மே 1ம் தேதி முதல் இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 27ம் தேதி கவுன்சலிங்கை தொடங்க அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த கவுன்சலிங்கில் பங்கேற்க ஆதார் எண் கட்டாயமா என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:கவுன்சலிங்கில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களின் சாதிச்சான்றிதழ், குடும்பத்தில் முதல்பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழ், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாணவர்கள் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பிற மாநிலங்களில் படித்திருந்தால் அதற்கான இருப்பிடச் சான்றிதழ், ஏஐசிடிஇ உள்பட பிற உதவித்தொகை கோரும் மாணவர்கள் வருமான சான்றிதழை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

மே 1ம் தேதி முதல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பித்து தனித்துவ எண் (யுசர் ஐடி), கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) பெறலாம். அதன்பின், பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழின் நகல்களை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கவுன்சலிங் விண்ணப்பிக்கவோ, பங்கேற்கவோ ஆதார் எண் கட்டாயமல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.