இன்று முதல் 3 நாட்களுக்கு வெயில்... தகிக்கும்!:வானிலை மையம் வெட்ட வெளிச்சம்

வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இயல்பை விட, மூன்று டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கும். சென்னை உள்ளிட்ட பல நகரங்கள், அக்னியின் உக்கிரத்தால் தகிக்கும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.


மார்ச், 1ல் கோடை காலம் துவங்கியது. படிப்பாக அதிகரித்து, ஏப்., 1 முதல், வெயிலின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலுார், நாகை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், பகலில் கடும் வெயிலும், இரவில் கடல் காற்றும் வீசுகிறது. இந்நிலையில், வங்க கடலின் தெற்கு பகுதியில், அந்தமான் அருகே, நேற்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது, படிப்படியாக வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது.

இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், ''வங்க கடலில் உருவாகியுள்ள, காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, மத்திய கிழக்கு பகுதியை நோக்கி நகரும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த மூன்று நாட்களுக்கு, இயல்பை விட வெயிலின் அளவு, இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்,'' என்றார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 'காற்றழுத்த தாழ்வு பகுதியால், வங்க கடலில் காற்று பலமாக வீசும். மீனவர்கள், அந்தமான் கடற்பகுதியை நோக்கி, மீன் பிடிக்க செல்ல வேண்டாம். அந்தமான் கடற்பகுதியில், கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது' என, கூறப்பட்டுள்ளது.

அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில், கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், வெப்ப சலனத்தால், மழை பெய்யும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று மாலை நிலவரப்படி, வேலுார், திருப்பத்துார், சேலத்தில் கோடை வெயில், 40 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டியது. தர்மபுரி, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில், 39; சென்னையில், 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. குன்னுார், கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில், லேசான மழை பெய்துள்ளது.

வெயில் அதிகமாவது எப்படி?

காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால், வழக்கமாக மழை தான் பெய்யும். ஆனால், இந்த முறை காற்றழுத்த தாழ்வு பகுதி, கடற்பகுதியிலேயே பயணிக்க உள்ளது. எனவே, தாழ்வு பகுதி வலுப்பெற்று செல்லும்போது, சுற்றுப் பகுதிகளிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி செல்லும்.

இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், ஈரப்பதம் குறையும். எனவே, வெயிலின் அளவு அதிகரிக்கும் என, வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.