வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு : மீண்டும் தலைதூக்குது 'CROSS MAJOR'

அரசுப் பள்ளி முதுநிலை வரலாறு ஆசிரியர் பதவி உயர்வில் மீண்டும் 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னை தலைதுாக்கியுள்ளது.முதுநிலை ஆசிரியர் காலிப்
பணியிடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், மற்ற பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படும். பதவி உயர்வு மூலம் நிரப்புவதில், வரலாறு முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது.



இதையடுத்து, இளநிலையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்து, முதுநிலையில் வரலாறு, புவியியல், பாடப்பிரிவுகளை படித்தோரை (கிராஸ் மேஜர்) மூன்று பங்கும், இளநிலை, முதுநிலை இரண்டிலும் ஒரே பாடப்பிரிவை எடுத்து படித்தோரை (சேம் மேஜர்) ஒரு பங்கும் நியமிக்க 2000 அக்., 18ல் உத்தரவிடப்பட்டது.தற்போது, 'சேம் மேஜர்' முடித்தோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும், பழைய உத்தரவுப்படியே முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் நடக்கிறது; இதனால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 

இதுதொடர்பான வழக்கில் 1:3 என்ற விகிதப்படி பதவி உயர்வு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, 1:3 என்ற விகிதத்தை மாற்ற 2016 நவம்பரில் கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது; ஆனால், முடிவு அறிவிக்கவில்லை.தற்போது, முதுநிலை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் எந்த விகிதப்படி பதவி உயர்வு அளிப்பது என்ற தகவல் இல்லை; இதனால், வரலாற்று ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு வரலாறு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறியதாவது:
நீதிமன்றம் உத்தரவிட்டும், 1:3 என்ற விகிதத்தை மாற்றவில்லை. தற்போது 'சேம் மேஜர்' ஆசிரியர்களுக்கு 2002--03 ஆண்டின் படியும், 'கிராஸ் மேஜருக்கு' 2007--08 ன் படியும் பணிமூப்பு பட்டியல் கோரப்பட்டுள்ளது. இதன்மூலம் 1:3 என்ற பழைய முறைப்படியே பதவி உயர்வு அளிக்க கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இவ்வாறு கூறினார்